நாட்டின் மிகப் பெரிய மென்பொருள் ஏற்றுமதியாளரான, டி.சி.எஸ்., எனும், ‘டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்’ நிறுவனம், நடப்பு நிதியாண்டில், 40 ஆயிரம் வேலை வாய்ப்புகளை, புதியவர்களுக்கு வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து, நிறுவனத்தின் மனித வள துறையின் தலைவர் மிலிந்த் லக்காடு கூறியதாவது: கொரோனா சம்பந்தமான கட்டுப்பாடுகள் எதுவும், கடந்த ஆண்டில் வேலை வழங்குவதில் எந்த சிக்கலையும் ஏற்படுத்தவில்லை. கடந்த ஆண்டில், கிட்டத்தட்ட 3.60 லட்சம் புதியவர்கள், ஆன்லைன் வாயிலாக நுழைவுத் தேர்வில் கலந்து கொண்டனர்.
கல்லுாரி வளாகங்களிலிருந்து கடந்த ஆண்டு 40 ஆயிரம் புதிய பட்டதாரிகளை பணியில் அமர்த்தி இருக்கிறோம். மேலும், அமெரிக்க வளாகங்களிலிருந்து, கிட்டத்தட்ட 2 ஆயிரம் பயிற்சியாளர்களையும் பணியில் அமர்த்தி உள்ளோம்.நடப்பு ஆண்டிலும் 40 ஆயிரம் புதியவர்களை பணியில் அமர்த்த உள்ளோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும், டி.சி.எஸ்., நிறுவனத்தில், தற்போது 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.
