தமிழ்நாட்டிற்கு மத்திய அரசிடம் இருந்து இதுவரை ஒரு கோடியே 17 லட்சத்து 18 ஆயிரத்து 890 தடுப்பூசிகள் வந்துள்ளது. அதுவும், கடந்த 10-ம் தேதியில் இருந்து 15-ம் தேதி வரை 14 லட்சத்து 92 ஆயிரத்து 930 தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது.
இந்நிலையில், மாநில அரசின் நேரடி கொள்முதல் மூலம் தமிழகத்திற்கு இன்று மேலும் 60 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் வந்துள்ளது. சென்னைக்கு வந்துள்ள இந்த தடுப்பூசிகளை மாவட்ட வாரியாக பயன்பாட்டின் அடிப்படையின் பிரித்து வழங்கும் பணிகளில் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், தடுப்பூசி தேவை அதிகரிப்பதால் பெரும்பாலான இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறை என்பது நீடித்து வருகிறது. தொடர்ந்து கூடுதல் தடுப்பூசிகளை பெறும் முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சர் வலியுறுத்த உள்ளார்.

