2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இந்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளது
கடந்த ஜூன் 22-ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த மத்திய பட்ஜெட்டுக்கான ஆயத்த பணிகள் கூட்டத்தில் பங்கேற்று தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ₹63,246 கோடியும், இயற்கை பேரிடர் நிதியாக ₹3,000 கோடியும் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது
மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பைபாஸ், மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் ஆகிய மூன்று வழித்தடங்களில் மெட்ரோ இரயில் பணிகள் நடைபெற்று வருகிறது
இத்திட்டத்திற்காக ஏப்ரல் 2017-ல் கொள்கை ரீதியிலான ஒப்புதலையும், அடுத்தடுத்த ஆண்டுகளில் நிர்வாக அனுமதியையும் வழங்கி, JICA, ADB, AIIB மற்றும் NDB போன்ற சர்வதேச நிறுவனங்களிடமிருந்து தமிழ்நாடு அரசு நிதியுதவியைப் பெற்றுள்ளது
ஆகஸ்ட் 2021-ல் பொது முதலீட்டு வாரியத்தின் ஒப்புதல் இருந்தபோதிலும், இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல் மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளது
இத்திட்டத்திற்கு 50% நிதியை வழங்க வேண்டிய மத்திய அரசு காலம் தாழ்த்தி வந்தாலும், நிதி நெருக்கடிக்கு மத்தியில் கடந்த நிதியாண்டில் 9,000 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசே செலவு செய்தது
இந்த நிதியாண்டில் மெட்ரோ திட்டத்திற்கான நிதி ரூ.12,000 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது
மெட்ரோ இரயில் திட்டத்தின் முதல் கட்டத்தை போல, 2-ம் கட்டத்திற்கும் 50% நிதியை மத்திய அரசு வழங்கும் முடிவவுக்காக தமிழ்நாடு அரசு காத்துக் கொண்டிருக்கிறது
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்ப்புறம்) திட்டத்தின் கீழ் ஒரு யூனிட்டுக்கு ₹1.5 லட்சம் மட்டுமே மத்திய அரசு வழங்குகிறது, அதே நேரத்தில் மாநில அரசு ஒரு யூனிட்டுக்கு ₹7.5 லட்சம் முதல் ₹13 லட்சம் வரை வழங்குகிறது
மத்திய அரசின் நிதி பங்கை உயர்த்தி அளிக்கவும் தமிழ்நாடு அரசு வலியுறுத்தி உள்ளது
ஓய்வூதிய திட்டத்திற்கான மத்திய அரசின் பங்கு ₹200-₹300 வரை மட்டுமே இருக்கிறது என்றும், மாநில அரசு ஒரு பயனாளிக்கு மாதம் ₹1,200 வரை வழங்கி வருவதாக தமிழ்நாடு அரசு சுட்டிக்காட்டியுள்ளது
மாநிலங்கள் வரிப் பகிர்வில் நியாயமான பங்கைப் பெறுவதை உறுதி செய்ய, அடிப்படை வரி விகிதங்களுடன் செஸ்(Cess) மற்றும் கூடுதல் கட்டணங்களை(Subcharges) இணைக்கும்படியும் மத்திய அரசை தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது

