கர்நாடகாவில் கடந்த மாதத்தில் இருந்து டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெரியவர்களுக்கு நிகராக குழந்தைகளையும் டெங்கு தாக்கி வருகிறது. திடீரென அதிக காய்ச்சல், தலைவலி, கண்ணில் எரிச்சல், மூட்டு வலி, வாந்தி, குமட்டல், உடலில் வீக்கம், காய்ச்சல் ஆரம்பித்த நான்கு நாட்களில் உடலில் தடுப்புகள் ஏற்படுவது அறிகுறியாக உள்ளது. இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று, டெங்கு பரிசோதனை செய்து கொள்ளுமாறு பொது மக்களை, சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
நேற்று காலை நிலவரப்படி, மாநிலம் முழுதும் 7,006 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுதும் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். கதக்கை சேர்ந்த 5 வயது சிறுவன் நேற்று மதியம் உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் டெங்கு பரிசோதனைக்கு 600 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

