திருச்சி அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனையொட்டி உற்சவர் அம்மனுக்கு இன்று காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அம்மன் மரக்கேடயத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து கொடி மரத்தில் சிவாச்சாரியார்களைக் கொண்டு வேத மந்திரங்கள் முழங்க அஸ்திர தேவர்களுக்கும், தங்க கொடி மரத்திற்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் குருக்கள் சமயபுரம் மாரியம்மன் படம் தாங்கிய தைப்பூசக் கொடியினை மந்திரங்கள், மேளதாளங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது.

