சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று காலை அதே பகுதிகளில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது.
இது வடக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடையக்கூடும். மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வரும் மே 27ம் தேதி உருவாக வாய்ப்புள்ளது.
இன்று (மே 23) 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:* கோவை * நீலகிரி, * திருப்பூர், * திண்டுக்கல், * தேனி, * தென்காசி, * திருநெல்வேலி * கன்னியாகுமரி கோவை, நீலகிரி மாவட்டங்களில் மே 25, 26ம் தேதிகளில், ரெட் அலர்ட் (அதி கனமழை) விடுக்கப்பட்டுள்ளது.
இதே நாட்களில், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை (மிக கனமழை) விடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல், திருப்பூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை தமிழக கடலோரப்பகுதிகள், தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று (மே 23) முதல் மே 27ம் தேதி வரை சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

