ரசிகர்களிடையே விருப்பமான தொலைக்காட்சியாக விஜய் டிவி பல ஆண்டுகளாக முன்னிலையில் இருந்து வருகிறது. பல கேம் ஷோ, சூப்பர் சிங்கர், நீயா நானா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் இருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர்.
இன்றைய காலகட்டத்தில் சீரியல்கள் கூட மிகவும் டிரெண்டியாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் படியாக எடுக்க தொடங்கிவிட்டனர். அந்த வகையில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் மக்களுடன் இணைந்து அவர்களுடன் உரையாடி, விருந்து வைத்து கொண்டாடியுள்ளது விஜய் டிவி.

பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களுக்கும், சீரியல்களுக்கும் எப்பொழுதுமே தனி மவுசு உண்டு. அதேபோல் சின்ன மருமகள் தொடர் உமன் சென்ட்ரிக் சீரியலாக இருப்பதால் பெண்களிடம் பாராட்டுகளையும், ஆதரவையும் பெற்று வருகிறது. அது மட்டும் இல்லாமல் கடந்த சில வாரங்களாக பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த தொடர், trpயிலும் முன்னணியில் இருக்கின்றது. இதனை கொண்டாடும் விதமாக மதுரையில் ஜூன் 13ஆம் தேதி மற்றும் விருதுநகரில் ஜூன் 14ஆம் தேதி தேதிகளில் மிகப்பெரிய பிரமாண்ட நிகழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் காலை பிரத்தியேகமாக சின்ன மருமகள் தொடரில் ரசிகர்கள் 50 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் வாழ்க்கையில் நிகழும் பிரச்சனைகள், தடங்கல்கள், குடும்ப சிக்கல்கள் என தனது சொந்த கதைகளை உணர்ச்சி பூர்வமாக பகிர்ந்து கொண்டனர். அவர்களிடையே சீரியல் குழுவினர் தங்களது கருத்துக்களையும், கேள்விகளையும் பதில்களையும் கேட்டு உரையாடி மகிழ்ந்தனர். இந்த தொடரில் தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் மொய் விருந்தை அடையாளப்படுத்தும் விதமாக ரசிகர்களுக்கு அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது.

அன்று மாலை விஜய் டிவி சீரியல் நடிகர், நடிகர்கள் குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர், உள்ளிட்ட விஜய் டிவி நிகழ்ச்சி பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டனர். 4000 ரசிகர்கள் முன்னிலையில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன் இந்த கொண்டாட்டம் இனிதாக நடந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரவி வருகின்றது.

