திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலில் ஆனித் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தேரோட்டம் நிகழ்வது வழக்கம். இவ்வாண்டு நிகழ்ச்சிகள் இன்று (29-06-2025) தொடங்கியது குறித்த செய்தியைக் கண்டேன். அதில் மேற்படி விழாவானது ”அங்கூர விநாயகர்” திருக்கோவிலில் தொடங்கியது என்று போடப்பட்டிருந்தது. அது மனதை ஈர்த்தது.
”வழிகாட்டும் விநாயகர் முதல் குபேர விநாயகர் வரை” எத்தனையோ பெயர்கள் விநாயகருக்கு உண்டு. ஆனால், உண்மையில் இப்போதுதான் “அங்கூர விநாயகர்” என்கிற பெயரைக் கேள்விப்படுகிறேன். உடனே மூளை குறுகுறுப்பானது. ஒருசில நூல்களில் தேடினேன். இணையத்திலும் வலம் வந்தேன். ஆனால், அந்த விநாயகரைப்பற்றியோ அல்லது அந்த கோவிலின் தலபுராணமோ அல்லது நாட்டுப்புற வடிவிலான கதைகளோ கிட்டவில்லை. அதனால் ”அங்கூரம்” என்னும் வார்த்தையைக் கொண்டு தமிழகராதி முதல் பலவற்றில் குறிப்புகளைக் காண விழைந்தேன். அப்போது கிடைத்த தகவல்கள்தான் கட்டுரையாக உங்கள் கவனத்திற்கு பந்தி வைக்கப்படுகிறது. காரணம், விஷயம் மிகவும் பிரமிப்பானது!
“அங்கூரம்” என்றால் என்ன?
இதற்கு “நங்கூரம்” என்று ஒரு பொருள் உள்ளது.
“முளை” அல்லது “வித்து (விதை)” என்றும் சொல்லலாமாம்!
“அங்குலா” என்ற சமஸ்கிருத சொல்லிலிருந்து பிறந்து வந்தது “அங்கூரம்” என்றும் ஒரு குறிப்பு கண்டேன்.
அங்கூரம் என்றால் “ஒரு விரலின் அகலம்” ஆகும்.
“அங்குலா” என்பது ஒரு அளவீட்டிற்கான பெயர் என்றும், அந்த அளவு தோராயமாக 1.763 சென்டிமீட்டர் ஆகும் என்பதை அறிந்தபோது ஆச்சரியம் பெருகியது.
”அங்கு” என்கிற வார்த்தைக்கு “வளைவு” என்றும் ஒரு பொருளுண்டு. வளைந்த வடிவத்தில் இருப்பதால் “அங்குசம், அங்கூரம், நங்கூரம்” என்று பொருள் விளங்குவதாக அறிய முடிகிறது.
“அங்கு” என்கிற வார்த்தையை மூலமாகக் கொண்டுதான் கணிதத்தில் “(Angle- ஆங்கிள்) கோணம்” என்கிற பிறந்ததாகவும் சொல்லப்படுகிறது.
மு.பழனிவாசன்

