ஆவடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகள், ரூ.2 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
ஆவடி அடுத்த பொத்தூர் பரப்பாளையம் விஷ்ணு நகர் 2வது தெருவை சேர்ந்தவர் சாமிவேல் (வயது 49). இவர் கடந்த 17ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான வேலூர் மாவட்டம் பொத்தேரி பகுதிக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு சாமிவேல் குடும்பத்துடன் வீட்டுக்கு வந்தார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவை உடைத்து அதிலிருந்து 40 சவரன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து சாமிவேல் ஆவடி டேங்க் பேக்டரி போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

