சென்னை தேனாம்பேட்டை டாக்டர் கிரியப்பா சாலையில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் சென்னை முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் பணியை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிறுவனத்தின் மேலாளர் கார்த்திக் குமார், பாண்டி பஜார் போலீஸ் நிலையத்தில் கடந்த மாதம் பரபரப்பு புகார் மனு கொடுத்திருந்தார். அதில் அவர் கொடுத்துள்ள புகாரில் “எங்கள் நிறுவனத்தில் சங்கரன் என்பவர் கடந்த 12 ஆண்டுகளாக ஏடிஎம் பணம் நிரப்பும் வேலை செய்து வருகிறார்.
அவர் ஏடிஎம் மையங்களில் முறையாக பணத்தை நிரப்பாமல் கையாடல் செய்திருப்பது வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்தபோது தெரிய வந்தது. அவர் இதுவரை 50 லட்சம் பணத்தை கையாடல் செய்துள்ளார். கடந்த மாதம் அவரிடம் விசாரித்த போது பணத்தை கையாடல் செய்ததை ஒப்புக்கொண்டார். இந்த பணம் திருப்பி தந்து விடுவேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார் தற்போது தலைமறைவாகி விட்டார் அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரவேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த புகார் மனுவை ஏற்று பாண்டி பஜார் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். தற்போது பணத்தை கையாடல் செய்து தலைமறைவான சங்கரை கைது செய்துள்ளனர்.

