லட்சம் ரூபாய் ஊதியம் பெற்ற முதல் தென்னிந்திய நடிகர்.
தென்னிந்தியாவில் பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் சினிமாக் கலைஞர் என்ற பெருமை சித்தூர் வி. நாகையாவுக்கு உண்டு. சினிமாத்துறையில் பலரும் பத்ம விருது பெற்றதற்காக அவர் வீட்டுக்குச் சென்று வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் இருந்தனர். அப்போது வாழ்த்த வந்தவர்களிடம் பேசிய நாகையா, மத்திய அரசு தென்னிந்த்தியாவில் உள்ள வயதான சினிமாக் கலைஞனுக்கு அதுவும் தென்னிந்திய மொழிகளில் நடித்த ஒருவனுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்து எனக்குக் கொடுத்திருக்கலாம் என்றார் நாகையா. மேலும், தென்னிந்திய திரைப்படத்தில் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் இவ்விருதைச் சமர்ப்பணம் செய்வதாக கூறினார்.
1943ல் ரேணுகா பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து “பாக்யலஷ்மி” என்ற படத்தைத் தெலுங்கில் தயாரித்தார். நாகையா தன் திரைப்பட வாழ்க்கையில் இருமுறை குழப்பமான மன நிலையில் இருந்துள்ளார். முதலாவதாக, சென்னை விருகம்பாக்கத்தில், தான் வாங்கிய 52 ஏக்கர் நிலத்தில் ஸ்டூடியோ கட்ட நினைத்தபோது. அந்தக் காலகட்டத்தில்தான், நாகையா ஸ்டூடியோ கட்ட நினைத்த இடத்துக்கு அருகில் பி.என்.ரெட்டி மற்றும் நாராயணசாமியும் இணைந்து வாகினி ஸ்டூடியோவைக் கட்டிக்கொண்டிருந்தனர். அதனால், குழப்பமான மனநிலையில் இருந்த நாகையா, ஸ்டுடியோ கட்டும் திட்டத்தை கைவிட்டார்.
பின்னர், 52 ஏக்கர் நிலத்தையும் விற்றுவிட்டார். ஒரு ஸ்டூடியோ கட்ட நினைத்த இடத்தில் இரண்டு ஸ்டுடியோக்கள் வந்தன. ஆம் “சியாமளா” மற்றும் “கற்பகம்” ஸ்டுடியோக்கள் கட்டப்பட்டன. மீதமுள்ள இடத்தில் ஏவிஎம் நிறுவனம் கல்வி நிறுவனங்களை அமைத்தன. ஆனால், இப்போது, இரு ஸ்டுடியோக்கள் இருந்த இடம் அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறிவிட்டன. வாகினி ஸ்டுடியோவும் போரம் விஜயா மாலாக மாறிவிட்டன
பத்திரிகையாளர், நாடக மற்றும் திரைப்பட நடிகர், பாடகர், இசையமைப்பாளர், திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மட்டுமின்றி இல்லாதவருக்கு கொடுத்து உதவி புரிந்த கொடையாளர் என்று பன்முகத் திறமைகளைக் கொண்டு தென்னிந்திய திரைப்படங்களில் தனக்கென்று தனி இடத்தைப் பிடித்தாலும் இறுதிக் காலத்தில் வறுமையில் வாடி தனது 69வது வயதில் காலமான சித்தூர் வி. நாகையா இன்றும் சென்னை தியாகராயநகரில் உள்ள பனகல் பார்க் அருகில் சிலையாகக் காட்சியளிக்கிறார்.

