நடிகர் சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம், திட்டமிட்டபடி மே 14-ஆம் தேதி வெளியாகாமல் நிதி நெருக்கடி மற்றும் பைனான்ஸ் சிக்கல்கள் காரணமாகத் தள்ளிப்போன நிலையில், அனைத்துத் தடைகளையும் கடந்து இன்று திரையரங்குகளில் வெளியானது.
இந்தப் படத்தின் தொடக்கத்தில் தமிழக முதல்வர் விஜய்க்கு ‘சிறப்பு நன்றி’ (Special Thanks Card) தெரிவிக்கும் கார்டு திரையிடப்பட்டது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சூர்யாவும் விஜய்யும் இணைந்து நடித்த திரையுலகின் ஆரம்பகாலத் திரைப்படமான ‘நேருக்கு நேர்’ படத்தில் இருவரும் தோன்றும் சில முக்கியமான காட்சிகள் அந்த நன்றி அட்டையில் இடம்பெற்றிருப்பது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

திரையுலகில் நீண்ட கால நண்பர்களாகத் திகழும் இவர்கள், ஒருவர் அரசியலிலும் மற்றொருவர் நடிப்பிலும் உச்சத்தில் இருக்கும் நிலையில், இந்த நெகிழ்ச்சியான நன்றியறிவிப்பு இரு தரப்பு ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
‘கருப்பு’ படத்தின் கதைக்களத்தோடு முதல்வருக்குத் தெரிவிக்கப்பட்ட இந்த நன்றி, அரசியல் மற்றும் திரையுலக வட்டாரத்தில் ஒரு ஆரோக்கியமான நட்புறவின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.



