சர்வதேச ஜூனியர் டென்னிஸ் அரங்கில் இந்தியாவின் புதிய நம்பிக்க நட்சத்திரமாக உருவெடுத்துள்ள பெங்களூருவைச் சேர்ந்த 13 வயது சிறுமி சிருஷ்டி கிரண் (Srishti Kiran), 13 வயதுக்குட்பட்டோருக்கான உலகளாவிய தரவரிசையில் (Under-13 Global Rankings) முதலிடத்தைப் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் சர்க்யூட் தொடர்களில் தொடர்ந்து 5 ஐடிஎஃப் (ITF) பட்டங்களை வென்று அசத்தியதுடன், குவாத்தமாலாவில் நடைபெற்ற மதிப்புமிக்க ‘ஐடிஎஃப் உலக டென்னிஸ் டூர் ஜூனியர்ஸ் J100’ தொடரில் ரன்னர்-அப் பட்டத்தையும் கைப்பற்றியதே இவரது இந்த அசாத்திய வளர்ச்சிக்குக் காரணமாகும்.
இதன் மூலம் சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் (ITF) ஒட்டுமொத்த ஜூனியர் தரவரிசையில் தனது வாழ்நாளின் மிகச்சிறந்த இடமான 357-வது இடத்திற்கு முன்னேறியுள்ள சிருஷ்டி, உலக அளவில் 13 வயதுக்குட்பட்ட பிரிவில் மிக அதிக ரேங்கிங் கொண்ட வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
நிதி நெருக்கடி மற்றும் பயணச் சவால்கள் காரணமாக, தரவரிசை கணக்கீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படும் 10 தொடர்களில் வெறும் 8 தொடர்களில் மட்டுமே பங்கேற்ற போதிலும், சக வீராங்கனைகளை விடக் கூடுதல் புள்ளிகளைக் குவித்து சிருஷ்டி இந்த உலக சாதனை உச்சியைத் தொட்டுள்ளார்.
இதுவரை டென்னிஸ் விளையாட்டில் டேவிஸ் கோப்பை வீரர்கள் மற்றும் கிராண்ட் ஸ்லாம் இரட்டையர் சாம்பியன்களை மட்டுமே அதிகம் கண்டுள்ள இந்தியாவிற்கு, உலகளாவிய ஒற்றையர் (Singles) பிரிவில் ஒரு மாபெரும் எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்கும் அசாத்திய திறமை கொண்ட வீராங்கனையாக இந்த இளம் சாதனையாளர் சிருஷ்டி கிரண் பார்க்கப்படுகிறார்.

