அம்மோனியா கசிவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் திமுக கொறடா எ.வ.வேலு வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், காவிரி மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு முழு வெற்றி கிடைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்திலேயே, டெல்லியில் உள்ள சட்ட நிபுணர்களுடன் விரிவாக ஆலோசனை செய்த பிறகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இந்தத் தீர்மானத் திருத்தத்தைக் கொண்டு வந்ததாகக் குறிப்பிட்டார்.
சபாநாயகரின் விளக்கத்தைத் தொடர்ந்து முதலமைச்சரும் அதனை ஏற்றுக்கொள்ளலாம் எனக் கூறியதைச் சுட்டிக்காட்டிய எ.வ.வேலு, அவையில் திருத்தம் கொடுக்கும் போது உறுப்பினர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்க முழு உரிமை உண்டு என்றும், தமிழக அரசு காவிரிப் பிரச்னைக்காகப் பல்வேறு வகைகளில் சட்டப்போராட்டங்களை நடத்தியுள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் நடக்கும் மக்கள் பிரச்னைகளைப் பேரவைத் தலைவரின் கவனத்திற்குக் கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், தமிழக முதலமைச்சர் விஜய்க்கு திமுக உறுப்பினர்கள் சார்பாகத் தனது பிறந்தநாள் வாழ்த்துகளையும் மனப்பூர்வமாகத் தெரிவித்துக் கொண்டார்.

