Mas Cinemas சார்பில், சாம் ஜோன்ஸ் நடித்து தயாரிக்க, இயக்குநர் K.தாமரைசெல்வன் இயக்கத்தில், காதலையும், நட்பையும் மையமாக கொண்டு, சமூக அவலங்களை சாடும், ஒரு கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “நதி”. அனைத்து பணிகளும் முடிந்து, ஜூலை 22 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீடு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நடிகர் வடிவேல் முருகன் பேசியதாவது..,
இந்த படத்தின் மூலம் கரு பழனியப்பன் போன்ற ஒரு சகோதரர் எனக்கு கிடைத்துள்ளார். இயக்குநர் எந்தவித பதட்டமும் இல்லாமல், படத்தை எழுதி இயக்கியுள்ளார். இந்த படம் எனக்கு ஒரு முக்கியமான அனுபவமாக இருந்தது. படம் நன்றாக வந்துள்ளது. பார்த்துவிட்டு உங்கள் கருத்தை கூறுங்கள் நன்றி.
இயக்குநர் A வெங்கடேஷ் பேசியதாவது..,
AP International உடன் இந்த படத்தை இணைந்து தயாரிப்பாளர் வெளியிடுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கயல் ஆனந்தி திரையில் குடும்ப பாங்கான பாத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார். இயக்குநர் தாமரைசெல்வன் வேலை பார்க்கும் விதம் இயக்குநர் பாசில் உடைய பாணியில் இருக்கிறது. கோடங்கி இந்த படத்தில் முழுமையாக ஒரு நல்ல பாத்திரத்தில் வருகிறார், அவர் கதாபாத்திரம் அனைவரையும் ஈர்க்கும் படி இருக்கும். இப்படம் நிச்சயமாக வெற்றிப்படமாக அமையும்.
நடிகை கயல் ஆனந்தி பேசியதாவது…,
இந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து மதுரையில் நடப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் கதையை கேட்கும் போது, இந்த கதாபாத்திரத்தை நிச்சயம் செய்ய வேண்டும் என உறுதியாக இருந்தேன். சிறந்த கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறேன். இந்த படத்தில் பணிபுரிந்த அனைத்து கலைஞர்களுக்கும் என் நன்றி.
இயக்குநர் நடிகர் கரு பழனியப்பன் பேசியதாவது…,
படத்தின் கதையை பற்றி கூறும் போது, வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் தயங்கியபடி கூறினார். அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதில் தான் எனக்கு அதிக விருப்பம். வில்லனாக நடிக்கும் போது எப்படி வேண்டுமானாலும் பேச முடியும். நல்லவனாக நடிக்கும் போது அது முடியாது. அதனால் எனக்கு வில்லனாக நடிப்பது பிடிக்கும்.
இயக்குநர் குழப்பமே இல்லாமல், தெளிவாக படத்தை உருவாக்கி முடித்துள்ளார். சின்ன பட்ஜெட்டில் சிறந்த படைப்பை உருவாக்கியுள்ளார். இப்படத்தின் இண்டர்வல் நிச்சயமாக எல்லோரும் ஆச்சர்யப்படும் ஒன்றாக இருக்கும். ஒளிப்பதிவாளர் பிரபு அவர்களுடைய பணி படத்தின் கதையை விட்டு நகராமல் இருக்கும். இந்த படக்குழு இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்த படத்தை உடனே உருவாக்க வேண்டும். ஆனந்தி படத்தில் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆனந்தி உடைய கதாபாத்திரம் இந்த படத்திற்கு பிறகு பெரிய அளவில் பேசப்படும். இந்த படம் கண்டிப்பாக கவனிக்கப்படும், படத்தில் உள்ள அனைவரும் பாராட்டப்படுவார்கள். அனைவருக்கும் நன்றி.

