ஆளுநர் பதவி, மாநிலங்களவை எம்.பி. பதவி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.100 கோடி மோசடி செய்த 4 பேரை சிபிஐ அதிரடியாகக் கைது செய்தது.
இதுகுறித்து சிபிஐ தரப்பில் கூறப்படுவதாவது:
மாநிலங்களவை எம்.பி, ஆளுநர் பதவி வாங்கித் தருவதாக ஒரு கும்பல் பல்வேறு நபர்களிடம் பண மோசடி செய்ததாக தகவல் எழுந்தது.
இது தொடர்பாக மகாராஷ்டிரா லட்டூரைச் சேர்ந்த கமலாக்கர் பிரேம்குமார் பந்த்கர், கர்நாடகா மாநிலம், பெல்காமைச் சேர்ந்த ரவிந்திரா வித்தால் நாயக், டெல்லி என்சிஆரைச் சேர்ந்த மகேந்திர பால் அரோரா, அபிஷேக்போரா, முகமது அஜாஸ் கான் ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரையடுத்து, சமீபத்தில் இவர்களின்வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டது.
இந்த ரெய்டுக்கின் 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் மட்டும் சிபிஐ அதிகாரிகளை தாக்கிவிட்டு தப்பிவிட்டார். இவர் மீது உள்ளூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் கைது செய்யப்பட்ட பிரேம்குமார் பந்த்கர் என்பவர் சிபிஐ பிரிவில் மூத்த அதிகாரியாக இருந்தவர்.
இவர்தான் மூளையாகச் செயல்பட்டு, பல்வேறு நபர்களிடம் பணம்பெற்று மோசடி செய்துள்ளார். உயர் அதிகாரிகள்,அரசியல்வாதிகளுடன் பழக்கம் இருப்பதால், ஆளுநர், எம்.பி. பதவி வாங்கித்தர முடியும் என ஏமாற்றியுள்ளார்.
சட்டவிரோதமாக ஏதாவது அரசு வேலைகள் செய்யவும் பந்த்கருக்கு ஏஜென்டாக, போரா, அரோரா, கான், நாயக் ஆகியோர் செயல்பட்டனர்.
தனிநபர்களிடம் ஆளுநர் பதவி வாங்கித் தருவதாகவும், மாநிலங்களவை எம்.பி. பதவி வாங்கித் தருவதாகவும் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் தலைவராகவும், அரசு சார்பில் நடத்தப்படும் நிறுவனங்களில் இயக்குநராகவும் நியமிக்க பேரம் பேசியுள்ளனர்.
இதற்காக ஏராளமான நபர்களிடம் ரூ.100 கோடி பெற்று மோசடி செய்துள்ளனர். பந்த்கர் சிபிஐயில் உயர் அதிகாரியாக இருப்பதை சுட்டிக்காட்டி, பல்வேறு போலீஸ் நிலையங்களில் தனக்குவேண்டியவர்களுக்கு சாதகமாக காரியங்கள் செய்துள்ளார்.
இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது
இவ்வாறு சிபிஐ தெரிவித்துள்ளது.

