ஆன்மீகச் சிந்தனையில் ஊறித்திளைக்கும் நம் பாரத தேசத்தில்,
ஆதிபரம்பொருளான சிவபெருமானுக்கு எத்தனையோ திருப்பெயர்கள்
உண்டு. அடியவர்கள் அவரவர் தங்கள் விருப்பம்போல் அன்பு மிகுதியால்
சிவனை பல சுந்தரமான பெயர்களால் சீராட்டுவார்கள். ஆயினும் ஒரே
ஒரு ஊரில் மட்டும் அங்கே குடிகொண்டிருக்கும் சிவனுக்கு
எண்ணிலடங்கா பல்வேறு பெயர்கள். ஆம்! மதுரையில்தான் இத்தகைய
சிறப்பு விளங்குகிறது.
ஒரு குடும்பத்தின் நிர்வாகத்தினைப் பற்றி குறிப்பிடும்போது,
சிதம்பரமா? (கணவர்) மதுரையா? (மனைவி) என்பர். அவ்வகையில்
மதுரை மனைவியின் ஊர். அவளது அரசு. அவளே மகாராணி. அவளுக்கு
மணமகனாக வந்து சேர்ந்தவர் சிவபெருமான். அதாவது வீட்டோடு
மாப்பிள்ளை. பொதுவாக வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்போருக்கு
வெளியில் சற்று மதிப்பு குறைவுதான்.
ஆனால், மதுரையில் கதையே வேறு. இங்கே சிவபெருமான் செல்லப்பிள்ளை. பாசத்துடன் மக்கள்
அவரை பல்வேறு திருப்பெயர்களால் அழைக்கும் மரபு இருந்துவருகிறது.
”சொக்கலிங்க பெருமான் , சுந்தரேஸ்வரர், சோமசுந்தரர்,
கல்யாணசுந்தரர், மீனாட்சி சுந்தரர், செண்பக சுந்தரர், அட்டாலைச்
சேவகன், அடியார்க்கு நல்லான், அதிர வீசி விளையாடுவான், அபிடேகச்
சொக்கர், அழகிய சொக்கர், கடம்பவனச் சொக்கர், புழுகுநெய்ச் சொக்கர்,
கடம்ப வனேஸ்வரர், கற்பூரச் சொக்கர், மதுரேசர், இறையனார்,
பேராலவாயர், அழகிய சொக்கநாதர், திருவாலவாயுடைய நாயனார்,
திருவாலவாயுடையார், திருவாலவாயுடைய தம்பிரானார், மதுரை
உடையார், சொக்கநாத சுவாமி, சொக்க நாயக ஈஸ்வர உடையார்,
மாதேவரழகிய சொக்கனாரான சுந்தரபாண்டிய சோழக்கோனார்.” என
பட்டியல் நீள்கிறது. விட்டுப்போனவை எத்தனையோ தெரியவில்லை ?!
இதேபோல் அவரது மனைவியான மகாராணிக்கும் பலபெயர்கள்
உண்டு. அவற்றில் சில:
”மீனாட்சி, மீனாள், பச்சைவல்லி, மரகத வல்லி, கயற்கண் குமாரி,
அங்கையற்கண்ணி, தடாதகைப் பிராட்டி, அபிடேகவல்லி, அபிராமவல்லி,
கற்பூரவல்லி, குமரித்துறையவள், கோமகள், சுந்தரவல்லி,
பாண்டிபிராட்டி, மதுராபுரித்தலைவி, மாணிக்கவல்லி, மும்முலைத் திரு,
வழுதி மகள், திக்காமக்கோட்டத்து ஆளுடைய நாச்சியார்” இப்படிப்
போகிறது பட்டியல்.
நம் முன்னோர்கள் தங்களின் ஆன்மீகச் சிந்தனையை மிகுந்த
நல்லறத்துடன் பின்பற்றி வாழ்க்கையை செம்மையாக வாழ்ந்துள்ளனர்.
இதனாலேயே தமிழ்மண் இன்றளவும் ஆன்மீகபூமியாக
கொண்டாடப்பட்டுவருகிறது.

