தமிழக அரசின் நிதிநிலை குறித்துத் தவெக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை, புதிய உண்மைகளையோ அல்லது தீர்வுகளையோ கொண்டிருக்காமல், ஏற்கனவே மக்கள் அறிந்த தகவல்களுக்குப் புதிய அட்டை போட்டு வெளியிடப்பட்ட ஒரு வெளுத்துப் போன அறிக்கையாகவே அமைந்துள்ளது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநிலக் கடன் இரு மடங்காக உயர்ந்திருப்பது மற்றும் வருவாய்ப் பற்றாக்குறை அதிகரித்திருப்பது போன்ற பழைய விவகாரங்களையே இந்த அறிக்கை பட்டியலிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், நிதி நெருக்கடியைச் சரிசெய்யவோ, வருவாயைப் பெருக்கவோ எந்தவொரு தெளிவான செயல்திட்டமும் இதில் இல்லை என்று சாடியுள்ளார்.
தவெக-வின் தேர்தல் வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும், வருவாய்ப் பற்றாக்குறையைக் குறைக்க என்னென்ன திட்டங்கள் உள்ளன எனச் செய்தியாளர்கள் எழுப்பிய அனைத்துக் கேள்விகளுக்கும் நிதியமைச்சர் “கால அவகாசம் தேவை” (it will take some time) என்ற ஒரே பதிலையே மழுப்பலாக அளித்துள்ளார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அரசுத் துறைகளின் கசிவுகளைத் தடுப்பதையே பிரதான தீர்வாக முன்வைத்திருப்பது எதிர்காலத்தில் வரிகளையும் கட்டணங்களையும் உயர்த்தும் பாதையை நோக்கி இந்த அரசு செல்வதைக் காட்டுவதாகவும், தெளிவான தொலைநோக்குப் பார்வையும் காலவரையறையுடன் கூடிய உறுதிமொழிகளும் இல்லாத இந்த அறிக்கை, ஏற்கனவே எல்லோராலும் அடித்துத் துவைத்து வெளுத்துப் போன ஆவணம் மட்டுமே என்றும் டிடிவி தினகரன் தனது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

