Home Uncategorized அக். 27ம் தேதி த.வெ.க-வின் முதல் மாநாடு!

அக். 27ம் தேதி த.வெ.க-வின் முதல் மாநாடு!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, வரும் அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பு!

வரும் அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ளது என நடிகரும், அக்கட்சியின் தலைவரும், விஜய் அறிவித்தார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு… 
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல், நம் கழகத் தோழர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும், தமிழக மக்களின் பேரன்புடனும், பேராதரவுடனும் நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்துகொண்டே வருகிறது. கழகக் கொடியேற்று விழாவின்போது, நமது முதல் மாநில மாநாட்டுத் தேதியை அறிவிப்பதாகக் கூறியிருந்தோம்.

நமது மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசியல் களத்தில் புதிய நம்பிக்கையை விதைக்கக்கூடிய நமது கழகத்தின் கொள்கைத் தலைவர்கள், கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டங்களைப் பிரகடனப்படுத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் அக்டோபர் 27ம் தேதி மாலை 4 மணியளவில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது. நமது வெற்றிக் கொள்கை மாநாடு, நம்மை வழிநடத்தப் போகும் கொள்கைகளையும் நாம் அடையப் போகும் இலக்குகளையும் முழங்கும் அரசியல் திருவிழாவாகவும் பெருவிழாவாகவும் கொண்டாடப்படவுள்ளது.

தமிழக மக்களின் மனங்களைத் தீர்க்கமாக வெல்லும் நோக்கில் அமையவுள்ள மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் ஏற்கெனவே நடந்துவரும் நிலையில், அதற்கான களப்பணிகளும் தொடங்கப்பட உள்ளன. இந்த மாநாட்டில் இருந்து வலிமையான அரசியல் பெரும்பாதையை அமைப்போம்! இந்நிலையில், நமது முதல் மாநில மாநாட்டை எல்லா வகையிலும் வெற்றிகரமாக நடத்துவதற்காக, தமிழக மண்ணைச் சேர்ந்த மகனாக, ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஆதரவையும் ஆசிகளையும் உரிமையுடன் வேண்டுகிறேன். விரைவில் சந்திப்போம்!! வாகை சூடுவோம்!!. 
இவ்வாறு நடிகர் விஜய் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version