ஒரு காலத்தில் காமெடியில் அதிக அளவு ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு கொடிக்கட்டி பறந்தவர் நடிகர் சந்தானம். அன்றைய இன்றைய மட்டுமில்லாம என்றைக்கும் சினிமா துறையில் காமெடி என்பது மிகவும் பிரபலம். ரசிகர்களை சிரிக்க வைக்க அவர்கள் படும் பாடு அவர்களுக்கு தான் தெரியும்.
அதிலும் இன்றைய சூழலில் ஜஸ்ட் வாட்ஸ் அப்-பில் ஒரு மீம்ஸை ஷேர் செய்து சிரிக்க வைக்கும் நவீன உலகில் நடிப்பில் மட்டுமின்றி டயலாக் மூலமும் இன்றும் ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார். தனக்கென்று தனியாக காமெடி ட்ராக் எதுவுமின்றி, முன்னணி நடிகர்களுடன் கதையின் போக்குடன் இணைந்து காமெடியில் கலக்கும் பாணி நடிகர் சந்தானத்திற்குச் சொந்தமானது.
தற்போது வரை இவரின் டைமிங் காமெடி திறமை கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது. இத்தனைக்கும் இவர் முதலில் தொகுப்பாளராகவும், சின்னத்திரையில் ஒளிபரப்பான லொள்ளுசபா என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு தனது திறமையை உலகறிய செய்தவர்.
அதன் பிறகு தனது பழக்கத்தால் கடின உழைப்பால் உயர்ந்து தமிழ் சினிமாவில் காமெடி கிங்-காகவே திகழ்ந்தார். அப்படி காமெடி கதாபாத்திரத்தில் கலக்கிய இவரை அவரை விட சூப்பரா இருக்கே.. இவரை விட ஆக்டிவ்-வா இருக்கே என்று உடனிருந்த சிலரே உசுப்பேத்தியதால் தற்போது ஹீரோவாக மட்டுமே தோன்றி வருகிறார்.
இவர் ஹீரோவா அறிமுகமான சூழலில் நாம் அவரிடம் ’காமெடி, ஹீரோ எது கஷ்டம்?’ என்று கேட்டதற்கு “ஹீரோதான் ரொம்பவே கஷ்டம். காமெடியில் யோசிப்பது, பஞ்ச் டயலாக் மட்டும்தான் இருக்கும். நாயகனாக நடிக்கும்போது டான்ஸ், ஆக் ஷன், செண்டிமெண்ட் என்று எல்லாவற்றையும் ஆடியன்ஸ் சரியாக எதிர்பார்ப்பாங்க. நாயகன் அவதாரம் எடுக்கும்போது அதையெல்லாம் கொஞ்சமும் சொதப்பாமல் சரியாக எக்ஸ்போஸ் செய்யலைன்னு அம்புட்டுத்தான்’ என்றார். தொடர்ந்து ’உங்களுக்கு போட்டி-ன்னு யாரை சொல்வீங்க?’-ன்னு கேட்ட போது “எப்போ நான் ஓ.பி. அடிக்க ஆரம்பிக்கிறேனோ அப்போ ரசிகர்களே என்னை ஓரங்கட்டிவிடுவார்கள். உழைக்கும் வரை நான் நம்பர் ஒன். வாழ்க்கையில் எப்பவும் உழைத்துக் கொண்டே இருக்கவே சிலர் விரும்பு வார்கள். அப்படித்தான் நானும். எனக்கு நான் தான் போட்டி” என்றார்.
இன்று 42 வயதை கடக்கும் சந்தானத்துக்கு நம் ஆந்தை சினிமா அப்டேட்ஸ் குழு சார்பில் ஹேப்பி பர்த் டே!
