அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சுற்றியிருப்பவர்களின் செயல்பாடுகள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருப்பதால், அடுத்தது என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் தூத்துக்குடி மாவட்ட திமுகவினர்.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சீட் வழங்கக் கூடாது. அப்படியே வழங்கினாலும் அமைச்சரவையில் சேர்க்கக் கூடாது என சுபாஷ் பண்ணையார் தரப்பு பல்வேறு வழிகளில் திமுக தலைமையை அணுகிய போதும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அனிதா மீது கொண்ட நம்பிக்கை காரணமாக அவருக்கு அமைச்சரவையில் இடமளித்து, அங்கீகாரம் அளித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே உதவியாளர்கள் நியமனத்தில் அமைச்சர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும், வம்பு வழக்குகளில் சிக்கக்கூடிய சர்ச்சையான நபர்களை அருகில் வைத்துக் கொள்ள வேண்டாம் எனவும் அமைச்சர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அட்வைஸ் செய்திருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது ஏற்கனவே துறை ரீதியான செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில், அவரது உதவியாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மூலம் ஆட்சிக்கு ஏற்படும் அவப்பெயர் ஏற்படும் சூழல் உருவாகிய தகவல் அறிந்ததும் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
போக்குவரத்து தலைமைக்காவலரை அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கன்னத்தில் அறைந்த விவகாரம் பூதாகரமாகி, ஒரு வழியாக அது சமாதானம் பேசப்பட்ட நிலையில், அமைச்சர் அனிதாவின் தீவிர ஆதரவாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான பில்லா ஜெகன் தூத்துக்குடி சுற்றுலா மாளிகை ஊழியரை தாக்கி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். அரசு சுற்றுலா மாளிகை வளாகத்தில் மது அருந்தக் கூடாது என கூறிய காரணத்துக்காக, பில்லா ஜெகன் இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்கப்பட்டவர் இஸ்லாமியர் என்பதால் இது வேறு ரூபங்களில் பிரச்சனை பெரிதானது. உளவுத்துறை மூலம் இந்த தகவல் முதலமைச்சர் கவனத்திற்கு சென்றதும், பில்லா ஜெகனை உடனடியாக கட்சியை விட்டு கட்டம் கட்டுமாறு அடித்த நொடியே, ஆர்.எஸ்.பாரதி மூலம் நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், அனிதாவுக்கு என்னாச்சு, ஏன் இப்படி சர்ச்சையில் சிக்குகிறார் என தன்னுடன் காரில் பயணித்த முக்கிய அமைச்சர்கள் ஓரிருவருடன் தனது கோபத்தை முதல்வர் வெளிப்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.
தன் மீது முதல்வர் கோபத்தில் இருப்பதை அறிந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், முதல்வரின் நண்பராக அறியப்படும் தொழிலதிபர் ராஜாசங்கர் மூலம் விளக்கம் அளிக்க முயன்றதாக தெரிகிறது. ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்காததை அடுத்து ஊர் திரும்பிய அவர், தனது உதவியாளர்கள் மற்றும் நெருக்கமான ஆதரவாளர்களை அழைத்து, லெப்ட் அண்ட் ரைட் வாங்கியதோடு, ஒழுங்காக இருப்பதாக இருந்தால் இருங்க, இல்லையென்றால் போங்க என கடுகடுத்திருக்கிறார் அமைச்சர் அனிதா.
இதனிடையே பில்லா ஜெகன் மீது சுற்றுலா மாளிகை ஊழியர் கொடுத்த புகாரின் பேரில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக அமைச்சர் அனிதாவின் உதவியை நாடி சென்ற பில்லா ஜெகனிடம், சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் தலையிட்டால் நிலைமையை அது மேலும் சிக்கலாகி விடும் எனக் கூறி அமைச்சர் தரப்பு கைவிரித்திருக்கிறது.
அனிதா ராதாகிருஷ்ணன் பெயர் சர்ச்சையில் இடம்பெறும் போதெல்லாம் அவருக்காக முதல்வரிடம் பேசக்கூடியவர் எனக் கூறப்படும் தொழிலதிபர் ராஜாசங்கரும், இந்த முறை பின்வாங்கிய விவகாரம் தான் உடன்பிறப்புகள் மத்தியில் பேசும் பொருளாக உள்ளது.

