‘We the Leaders’ இயக்கத்தின் தலைவரான கே. அண்ணாமலை, தனது பெயரையோ அல்லது புகைப்படங்களையோ பயன்படுத்தித் தொடங்கப்பட்டுள்ள நற்பணி மன்றங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், அவற்றை உடனடியாகப் பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பணிவுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை உருவாக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட தங்களின் இயக்கத்தில் மூன்றே நாட்களில் 17 லட்சம் உறுப்பினர்கள் வரை இணைந்துள்ளதாகவும், தற்போதைய சூழலில் இதில் யாருக்கும் எந்தப் பதவியோ, பொறுப்போ வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சூழ்நிலையில், சில தன்னார்வலர்கள் தன்னிச்சையாக ‘அண்ணாமலை அன்புக் கூட்டம்’, ‘அண்ணாமலை நற்பணி மன்றம்’, ‘அண்ணாமலை மக்கள் இயக்கம்’ போன்ற பெயர்களில் அமைப்புகளைத் தொடங்கி, மாவட்ட வாரியாகப் பொறுப்புகளை அறிவித்து வருவது வருத்தத்திற்குரியது என்றும், அவற்றுக்கும் ‘We the Leaders’ இயக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஒரு நல்ல நோக்கத்திற்காகத் தொடங்கப்பட்ட பேரியக்கத்தின் முயற்சி ஒரு சிலரின் இத்தகைய செயல்பாடுகளால் நீர்த்துப்போய்விடக் கூடாது என்பதால், தனது பெயர் மற்றும் படங்களைப் பயன்படுத்துவதை அனைவரும் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள அவர், இயக்கத்தில் இணைய விரும்புவோர் ‘wetheleader.org’ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக மட்டுமே தங்களை இணைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.-
