சர்ச்சைத் தீர்ப்பு வழங்கிய மும்பை நீதிபதி திடீர் ராஜினாமா!
ஆடைக்குமேல் தொடுவது பாலியல் சீண்டல் இல்லை என்று சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கிய மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா வி கான்டேவாலா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மும்பை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக இருந்த புஷ்பா வி கான்டிவாலாவின் பதவிக்காலம் முடிய இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருந்த நிலையில் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவதை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் தாக்கல் செய்த வழக்கில் மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளை கடந்த ஜனவரி 19ம் தேதி தீ்ர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை நீதிபதி புஷ்பா வி கான்டேவாலா வழங்கினார்.
அதில், குற்றம் சாட்டப்பட்ட நபர் சிறுமியின் ஆடைகளை கழற்றாமல் அவரின் உடலை சீண்டி உள்ளார், எனவே இது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுக்கும் போக்சோ சட்டத்தின்கீழ் குற்றமாகாது.
உடல் ரீதியான தொடர்பு இல்லாததால் போக்சோ சட்டத்தின் கீழ் கருதப்படாது எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ சட்டப் பிரிவையும் ரத்து செய்தது.
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், தேசிய மகளிர் ஆணையம் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்புக்கு எதிராக முறையிட்டனர்.
இதனையடுத்து இந்த வழக்கிலிருந்து குற்றவாளியை விடுவித்த மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளையின் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
நீதிபதிகள் யு.யு.லலித், நீதிபதிகள் ரவிந்திர பாட், பேலா எம் திரிவேதி தலைமையிலான அமர்வில் அளித்த தீர்ப்பில், குற்றம்சாட்டப்பட்டவர் அடுத்த 4 வாரங்ளுக்குள் சரணடைய வேண்டும். போக்சோ நீதிமன்றம் வழங்கிய 3 ஆண்டு சிறை, 5 ஆண்டு கடும் சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தனர்.
போக்சோ வழக்கில் தீர்ப்பு வழங்கிய மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு நீதிபதி கான்டேவாலா மாவட்ட நீதிபதியாக தரம் இறக்கி கொலிஜியம் பரிந்துரைத்தது.
இவர் தனது பதவிக் காலம் முடியும் வரை அதாவது 2022 பிப்ரவரி வரை மாவட்ட நீதிபதியாக இருப்பார்.
தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் யுயு லலித், ஏ.ஏ.ம் கான்வில்கர் ஆகியோர் கொண்ட கொலிஜியம் அமர்வு இந்த முடிவை எடுத்துள்ளது.
அடுமட்டும் அல்லாமல் நீதிபதி கான்டேவாலாவுக்கு 2 ஆண்டுகள் பதவிக்காலம் நீட்டிப்பு செய்து தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலிஜியம் கடந்த 2020ம் ஆண்டு பரிந்துரை செய்திருந்தது. அதை ஓர் ஆண்டாகவும் கொலிஜியம் குறைத்தது.
கூடுதல் நீதிபதியாக இருந்த காண்டேவாலாவின் பதவிக்காலம் வரும் 12ம் தேதியுடன் முடிகிறது. அதன்பின் அவர் மாவட்ட நீதிபதியாக தரமிறங்கி பணியாற்ற வேண்டிய நிலை இருந்தது.
இந்நிலையில் தனது பதவிக்காலம் முடிய இரு நாட்கள் இருக்கும் நிலையில் நேற்று காண்டேவாலா ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

