ஏழ்மையோடு போராடி பிளாட்பாரத்தில் படுத்துறங்கிய ஆர்.எம்.வீரப்பன் பிறகு படத் தயாரிப்பாளராகவும் உயர்ந்தார். பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். என்று பல தலைவர்களோடு பழகியவர். தி.க., தி.மு.க., அண்ணா தி.மு.க. என்று திராவிட கட்சிகளிலேயே பயணித்தவர். அமைச்சராக இந்தியா முழுவதும் அறியப்ப்பட்டவர்.
‘’இந்தப் புகழ் அனைத்தும் என்னுடைய காலத்திற்குப் பிறகு எத்தனை காலம் நிலைக்கும், எத்தனை பேரிடம் நிலைக்கும் என்பது ஒரு கேள்விக்குறியே. எனவே என் காலத்திற்குப் பிறகு என்னை யார் நினைக்கிறார்களோ இல்லையோ என் வல்லத்திரா கோட்டை கிராமத்து மக்கள் என்னை நினைக்க வேண்டும்’’ என நினைத்தார் ஆர்.எம்.வீ. அதற்காக தன் சொந்தப் பொறுப்பில் சில காரியங்களைச் செய்தார்.
தாயார் தெய்வானை அம்மையாரின் அஸ்தியை வைத்து நினைவு மண்டபம் எழுப்பினார். ஒரு ஏக்கர் அளவு கொண்ட அந்த பகுதிக்கு அன்னை தெய்வானை அம்மாள் நினைவு மண்டப வளாகம் என்று பெயரிட்டார். அங்கே ‘இராம.வீரப்பன் அறிவகம்’ என்ற பெயரில் எம்.ஜி.ஆர். நூலகம் ஒன்றை அமைத்தார்.
அந்த நூலகம் தொடர்ந்து செயல்படவும் ஏற்பாடு செய்தார். புதுக்கோட்டை – அறந்தாங்கி பிரதான சாலையில் வல்லத்திரா கோட்டை கிராமத்தை அடைந்தவுடன் அனைவர் பார்வையிலும் படும்படி அந்த அறிவகமும் நூலகமும் அமைந்திருக்கிறது.
அழகிய பூங்காவாக பராமரிக்கப்பட்டு வருகிறது. ’’என் தாயாரின் நினைவிடத்திற்கு அருகிலேயே என் நினைவிடமும் அமைய வேண்டும் என்ற விருப்பத்தில் அதற்கான இடத்தை ஒதுக்கி, என் குடும்பத்தாரிடமும் என் விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறேன்’’ என ஏற்கெனவே வீரப்பன் சொல்லியிருக்கிறார். அதன்படி அங்கேதான் வீரப்பனின் உடல் அடக்கம் செய்யப்படும்.
’’இப்போது நான் வாழ்க்கையின் அந்தி வேளைக்கு வந்து விட்டேன். இன்னும் எத்தனை காலம் எனக்கு விதிக்கப் பட்டிருக்கிறது என்பதை அறியேன். எனக்குக் கடன் இல்லை. என் குடும்பத்தினர் யாரையும் கடனாளியாக வைக்கவில்லை.
இந்த மன நிறைவோடும், அமைதியோடும் இறுதிவரை உழைத்துக் கொண்டே வாழ வேண்டும். இதுவே என் விருப்பம்” என சொல்லியிருந்தார் வீரப்பன்.
