பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ்க்கு (Mayonnaise) விதிக்கப்பட்டிருந்த தடையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துத் தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சால்மோனெல்லா டைபிமிரியம், சால்மோனெல்லா என்டிரிடிடிஸ், எஸ்கெரிச்சியா கோலி மற்றும் லிஸ்டீரியா மோனோசைட்டோஜென்ஸ் போன்ற உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் மயோனைஸ் எளிதில் மாசுபடுவதால், பொதுமக்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு கடந்த 2025 ஏப்ரல் மாதம் முதன்முதலில் இந்தத் தடை விதிக்கப்பட்டது.
குறிப்பாக, உணவகங்களில் முறையான வெப்பநிலையில் சேமிக்கப்படாத மயோனைஸ் நச்சுத்தன்மை அடைந்து பலருக்குப் பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், தற்போதைய தடையானது முட்டையற்ற மயோனைஸ்க்கு (Eggless Mayonnaise) பொருந்தாது என்றும், பச்சை முட்டையைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் மயோனைஸை உணவகங்கள் பரிமாறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.

