மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் பதற்றம் காரணமாக, கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் தன்னிச்சையாகவும் வெளிப்படைத்தன்மையின்றியும் உயர்த்தியுள்ள கூடுதல் கட்டணங்களை (War-risk surcharges) முறைப்படுத்தக் கோரி இந்திய பாஸ்மதி அரிசி ஏற்றுமதியாளர்கள் மத்திய அரசுக்கு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஒரு கண்டெய்னருக்கு 800 டாலர் முதல் 6,000 டாலர் வரை வசூலிக்கப்படும் இத்தகைய கூடுதல் கட்டணங்கள், ஏற்றுமதிப் பொருட்களின் மதிப்பில் 70 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால் வர்த்தகம் பெரும் பாதிப்படைந்துள்ளதாக ‘பாஸ்மதி அரிசி விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் மேம்பாட்டு அமைப்பு’ (BRFEDF) கவலை தெரிவித்துள்ளது.
கப்பல் நிறுவனங்கள் தன்னிச்சையாக சரக்குகளை மாற்றுப் பாதையில் திருப்புவது மற்றும் முன்னறிவிப்பின்றி கட்டணங்களை உயர்த்துவது போன்ற நடவடிக்கைகளால் சிறு ஏற்றுமதியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக முறையான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட வேண்டும் என்றும், இல்லையெனில் சர்வதேசச் சந்தையில் இந்திய அரிசியின் போட்டித்தன்மை கேள்விக் குறியாகும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
