Home Uncategorized சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கான தேதி அறிவிப்பு!

சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கான தேதி அறிவிப்பு!

2024-ம் ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெறும் நாட்கள் குறித்த அறிவிப்பை தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கமான பபாசி அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது அண்டை மாநில புத்தகப் பிரியர்களும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் சென்னை புத்தகக் கண்காட்சியை எதிர்பார்ப்பது வழக்கம்.

அனைத்து பதிப்பகத்தின் புத்தகங்களும் கிடைப்பதோடு, புத்தகக் கண்காட்சிக்கு என சிறப்பு தள்ளுபடியுடன் புத்தகம் விற்கப்படுவதால் புத்தகப்பிரியர்கள் கண்காட்சியை தவறவிடுவதில்லை.

குடும்பத்துடன் சென்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு ஆண்டு முழுக்க படிக்க வேண்டிய புத்தகங்களை வாங்கிச்செல்வது வழக்கம்.

இதனால் புத்தகக்கண்காட்சி நடைபெறும் நாள் எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்போடு அனைவரும் காத்திருப்பர். இந்நிலையில் 2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள புத்தகக்கண்காட்சி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி, சென்னை புத்தகக் காட்சி வரும் ஜனவரி மாதம் 5 ஆம் தேதி தொடங்கி, 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கத்தின் (பபாசி) சார்பில் நடத்தப்படும் இந்தப் புத்தகக் காட்சி, வழக்கம்போல இந்த ஆண்டும் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் நடைபெறவுள்ளது.

இக் காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இத்துடன் அவர் புத்தகப்பூங்கா உள்ளிட்ட புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.

சென்னைப் புத்தகக் காட்சியை ஒட்டி நடத்தப்படும் சர்வதேச புத்தகக் காட்சியும் இதே வளாகத்தில் 3 நாட்கள் பிரமாண்டமாக நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை அரசு வெளியிட உள்ளது.

Exit mobile version