தமிழகத்தில் பிரதமர், முதல்வர் உள்ளிட்ட, முக்கிய பிரமுகர்கள் செல்லும் இடங்களில், உளவுத்துறை, சட்டம் ஒழுங்கு போலீசார் முன்னதாகவே சென்று ஆய்வு பணியில் ஈடுபடுவது வழக்கம். இதற்கான ஆயத்த பணிகள் நடக்கும் போதே அவர்கள் செல்லும் வழித்தடத்தில் சாலைகளில் வரிசையாக பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுவார்கள். இவர்கள் முக்கிய பிரமுகர்கள் செல்லும் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.
இந்த பணியில் பெண் போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். சாலைகளில் பணிபுரியும் போது இவர்களுக்கு குடிக்க தண்ணீர் கூட கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. இயற்கை உபாதையை கழிக்க வசதியின்றி தவித்தனர். இந்நிலையில் பாதுகாப்பு பணியில் சாலையோரங்களில் பெண் போலீசார் காத்திருப்பதை தவிர்த்து அவர்களுக்கு வேறு பணி வழங்க தமிழ் நாடு காவல் துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதையடுத்து, முதல்வர் உள்பட முக்கிய பிரமுகர்கள் செல்லும் சாலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதில் இருந்து பெண் போலீசாருக்கு விலக்கு அளித்து தமிழக காவல்துறை டிஜிபி திரிபாதி வாய்மொழி உத்தரவிட்டுள்ளார்.
