Home Uncategorized சாய்பாபா கோவில்களை, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும்

சாய்பாபா கோவில்களை, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும்

சென்னை ஐகோர்ட்டில் கோவை உப்பிலிபாளையத்தைச் சேர்ந்த சுரேஷ்பாபு என்பவர் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் உள்ள சாய்பாபா கோவில்களில், வெள்ளை மார்பிள் கல்லால் ஆன சாய்பாபா சிலை உள்ளது. சாய்பாபா கோவில்களை, அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை உள்ளது.

சாய்பாபாவின் உண்மையான பெயர் தெரியவில்லை. அவரது மத அடையாளத்தையும் உறுதி செய்ய முடியவில்லை. சீரடியில் சாய்பாபா கோவில் உள்ளது.

தமிழகத்தில் பல இடங்களில் உள்ள ஹிந்து கோவில்களில், சாய்பாபா சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. சாய்பாபா கோவில்களில், நந்தி சிலை உடன் சாய்பாபா சிலையும் நிறுவப்பட்டு உள்ளது. இது, ஆகம விதிகளுக்கு எதிரானது.

சாய்பாபா சிலைக்கு எதிராக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நந்தி சிலையை அகற்ற வேண்டும். சாய்பாபாவை பின்பற்றுபவர்கள் உள்ளனர்.

அதற்காக, ஹிந்து ஆகம விதி, நம்பிக்கையை மீற முடியாது. எனவே, ஹிந்து கோவில்களில் எங்கெங்கு சாய்பாபா சிலைகள் நிறுவப்பட்டுள்ளதோ, அவற்றை அகற்ற வேண்டும்.

எதிர்காலத்திலும், சாய்பாபா சிலையை கோவிலுக்குள் நிறுவாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.- இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனு, பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், முகமது ஷபிக் அடங்கிய முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது.

மனுவுக்கு பதில் அளிக்க, அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.

Exit mobile version