களத்தில் எதையும் சொல்லிவிட்டுச் செய்யக்கூடியவர் அல்ல… செய்துவிட்டுப் பேசப்படக்கூடியவர்’ என்று எல்லோராலும் சொல்லுமளவுக்கு பெயர்போனவர் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். இன்று (ஏப்ரல் 24) அவருடைய பிறந்த தினம்.
24 ஆண்டுகள் கிரிக்கெட் உலகை கட்டியாண்ட இந்திய கிரிக்கெட் அணியின் பிதாமகன்… லிட்டில் மாஸ்டர்… மாஸ்டர் பிளாஸ்டர் என்று போற்றப்படும் மாபெரும் ஜாம்பவான் இவர் கிரிக்கெட்டால் உலகளவில் பலர் ஃபேமஸ் ஆனார்கள், ஆனால் கிரிக்கெட்டே ஃபேமஸ் ஆனது சச்சின் டெண்டுல்கரால்தான் என்று சொன்னால் அது புகழுரை அல்ல..
இந்திய கிரிக்கெட்டின் பிதாமகன் என்ற வார்த்தைக்கு அர்த்தம் இதுதான். கிரிக்கெட் உலகிற்கு இளம் சிறுவனாய் அறிமுகமான நாள் முதல் இந்திய லெஜண்ட்ஸ் அணி வரை, அனைத்திலும் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராக சச்சின் வலம் வருகிறார்.
தவிர, ஓய்வுபெற்று ஆண்டுகள் பலவாயினும் இன்றும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருப்பது என்பது சாதாரண விஷயமல்ல. இன்னும் சொல்லப்போனால், சச்சினுடன் எத்தனையோ நட்சத்திரங்கள் இணைந்து ஆடியிருக்கின்றனர்; ரன்கள் குவித்திருக்கின்றனர்; வெற்றியைத் தந்திருக்கின்றனர்.
ஆனாலும், சச்சின் மட்டுமே இந்திய ரசிகர்களின் உணர்வாய் ஒன்றிப் போயுள்ளார் என்பது பெருமைப்பட வேண்டிய விஷயம். 1990களில் இந்திய அணிக்கு ஏகப்பட்ட பின்னடைவுகள். கபில்தேவ் கிரிக்கெட்டின் கடைசி அத்தியாயத்தில் இருந்தார்.
ஆதர்ஷம் என சொல்ல யாருமில்லாத நிலை. டாப் 5 விக்கெட்டுகளுக்கு பிறகு கடைசி 5 பிளேயர்களால் கையில் பேட்டை கூட ஒழுங்காக பிடிக்க தெரியாது. கடைசி 5 விக்கெட்டுக்கு 10 ரன்கள் வந்தாலே பெரிய விஷயமாக மாறிப்போனது.
ஆனால், 1994ம் ஆண்டுக்கு பிறகு தனி ஒருவனாக இந்திய கிரிக்கெட் அணியை தாங்கி பிடித்தது சச்சின் மட்டுமே. எனவேதான், அவர் இருந்தால் அணி வெல்லும், அவுட்டானால் தோற்கும் என்ற முடிவுக்கு வந்த ரசிகர்கள், அவர் அவுட்டானால் டிவியையே ஆப் செய்துவிட்டு வேறு வேலைகளை பார்க்க கிளம்பினார்கள்.
11 பேர் கொண்ட அணியல்ல, ஒற்றை சிங்கத்தால் செயல்பட்ட ஒரு அணியாகவே காட்சியளித்தது இந்திய கிரிக்கெட் அணி.
