இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் அனந்தப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மிகச் சிறிய கிராமம் புட்டபர்த்தி. தற்போது இக்கிராமம் சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் புகழ்பெற்றிருப்பதற்குக் காரணம் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா என்றால் மிகையில்லை.
பகவான் சாய் பாபாவின் மீது அதீத பற்றுகொண்ட பக்தர்களால் புட்டபர்த்தியில் பாபாவுக்காக கட்டப்பட்டுள்ள ஆசிரமம் `பிரசாந்தி நிலையம்’ என்று அழைக்கப்படுகிறது.
அமைதி தவழும் நிலையம் என்பதே இதன் பொருள். நாட்டின் மிக முக்கிய சுற்றுலா யாத்திரை தலங்களில் ஒன்றாக புட்டபர்த்தி விளங்குகிறது. உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பிரசாந்தி நிலையத்திற்கு வந்து சாய் பாபாவின் அருளைப் பெற்றுச் செல்கிறார்கள்.
ஒருகாலத்தில் பெயரே கேள்விப்படாத மிகவும் சின்னஞ்சிறு கிராமமாக இருந்த புட்டபர்த்தியில் இன்று, விமான நிலையம், பன்முக நவீன தொழில்நுட்ப மருத்துவமனை, புகழ்பெற்ற கல்விநிறுவனங்கள் என ஒட்டுமொத்த உலக மக்களின் கவனத்தையும் ஈர்க்கும் நகரமாக மாறி விட்டது.
சாய் பாபாவின் அருளைப் பெறுவதற்காக அன்றாடம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புட்டபர்த்திக்கு வந்து காத்திருக்கிறார்கள். சிறப்பு பயிற்சி பெற்ற தன்னலமற்ற தொண்டர்களும், ஊழியர்களும் பாபாவின் அருளைப் போற்றி பஜன் உள்ளிட்ட பாடல்களைப் பாடுவதுடன், தினமும் வரும் பக்தர்களுக்கு வழிகாட்டுகிறார்கள்.
வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவத்தை போதிக்கும் கொள்கைகளின்படி சாய் பாபாவின் போதனைகளும் விளங்குகின்றன. உண்மை, நேர்மை, அமைதி உலக மக்களிடத்தில் அன்பு, சாத்வீகம் போன்றவையே பக்தர்களுக்கு பாபாவின் போதனைகளாக உள்ளன. சாய்பாபாவின் ஆன்மீகத் தத்துவம் எளிமையானது.
“கடவுள் ஒருவர்தான். அவர்தான் அனைத்து மதங்களின் காரணகர்த்தா. என்னிடம் வர மதம் தேவையில்லை. உங்கள் மதங்களிலேயே இருந்தபடி என்னைப் பின்பற்றுங்கள். மக்களுக்கு தொண்டு செய்யுங்கள். மரணத்துக்குப் பிறகும் உங்கள் சேவை, உங்கள் பெயரை உலகுக்கு உரத்துச்சொல்லும் என்பதை நம்புங்கள்,” என்றார் பாபா.
கல்வி நிறுவனங்கள், அருங்காட்சியகம், விண்வெளி மையம் போன்றவை ஆசிரமத்தில் அடங்கியுள்ளன. ஆண்டுதோறும் நவம்பர் 23ஆம் தேதியன்று பிரசாந்தி நிலையம் வண்ணமயமாக, அழகுடன் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூணும்.
ஆம் இன்றைய தினம் சாய் பாபாவின் பிறந்த நாளாகும்
