இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 2ஜி எத்தனால் ஆலையை காணொளி வாயிலாக திறந்து வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, “சுயநல அரசியலில் ஈடுபடுபவர்கள் யார் வேண்டுமானாலும் வந்து இலவசமாக பெட்ரோல், டீசல் அறிவிக்கலாம்.
இத்தகைய நடவடிக்கைகள், நமது குழந்தைகளிடம் இருந்து உரிமைகளை பறிப்பதுடன், நாடு தன்னிறைவு பெறுவதை தடுக்கும். வரி செலுத்துபவர்கள் மீது சுமையை ஏற்றிவிடும்.
இயற்கையை வழிபடும் நம் நாட்டில் இயற்கையைப் பாதுகாப்பதில் உயிரி எரிபொருள் முக்கியமானது. இதை நம் விவசாயிகள் நன்றாக புரிந்து கொள்கிறார்கள்.
கடந்த 7-8 ஆண்டுகளில் எத்தனாலை பெட்ரோலுடன் கலப்பதன் மூலம் 50 ஆயிரம் கோடி அந்நியச் செலாவணி சேமிக்கப்பட்டுள்ளது. எத்தனால் ஆலை எரிபொருள் பிரச்னைக்கு தீர்வாக இருக்கும்.
எட்டு ஆண்டுகளில் எத்தனால் உற்பத்தி 40 கோடி லிட்டரில் இருந்து 400 கோடி லிட்டராக அதிகரித்துள்ளது. பானிபட்டில் உள்ள இரண்டாம் தலைமுறை எத்தனால் ஆலை ஹரியானா மற்றும் டெல்லியில் மாசுபாட்டைக் குறைக்க உதவும்” எனக் கூறினார்.
