காந்தாரா 2 ஆம் பாகத்தின் படப்பிடிப்பில் அடுத்தடுத்து நடக்கும் உயிரிழப்புகள் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியான திரைப்படம் “காந்தாரா”.
படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆனது. இதையடுத்து தமிழ், இந்தி, மலையாளம் என பிற மொழிகளில் டப் செய்யப்பட்டது. உலகளவில் இந்த படம் ரூ. 400 கோடி வசூல் சாதனை படைத்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, காந்தாரா படத்தின் இரண்டாம் பாகமான “காந்தாரா: சாப்டர் 1” படத்தை தற்போது ரிஷப் ஷெட்டி இயக்கி வருகிறார்.
பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காந்தாரா புதிய பாக படத்தின் படப்பிடிப்பு ஷிவமோகா மற்றும் அகும்பே ஆகிய பகுதிகளில் நடக்கின்றது. படப்பிடிப்புக்காக வந்திருந்த கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த விஜூ வி.கே., விடுதியில் தங்கியிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
ஜூனியர் கலைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹோம்ஸ்டேயில் 43 வயதான நிஜு தங்கியிருந்த நிலையில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
காந்தாரா 2 ஆம் பாகம் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞரான கபில் என்பவர் கடந்த மாதம் கேரளாவில், சவுபர்னிகா நதியில் மூழ்கி உயிரிழந்தார். இதே படத்தில் நடித்து வந்த நகைச்சுவை நடிகர் ராகேஷ் புஜாரி கடந்த மாதம் தனது நண்பரின் திருமண நிகழ்ச்சியில் நடனமாடும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். காந்தாரா 2 ஆம் பாகத்தில் பணியாற்றிய 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது படக்குழுவை அதிர வைத்துள்ளது.

