முன்னோர்கள் நோய் வராமல் பயன்படுத்திய மூலிகையில் ஒன்று கற்பூரவள்ளி. இது சளி, இருமல், ஜுரம், சைனஸ், போன்ற பல நோய்களுக்கு சிறந்த மருந்து. குழந்தைகளுக்கும் மிகவும் சிறந்த மருந்தாக பயன்படுகின்றது.
பிறந்த குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தாங்கள் வாழ்நாளில் பயன்படுத்தக்கூடிய மூலிகை. மார்பு சளியால் அவதிப்படுபவர்கள் ஒரு கைப்பிடி அளவு கற்பூரவள்ளி இலைகளை எடுத்து, இடித்து 1/4 டீஸ்பூன் மஞ்சள், மிளகு, சுக்கு பொடி சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி காலை இரவு உணவுக்கு முன் குடிக்க வேண்டும். இவ்வாறு நான்கு, ஐந்து நாட்கள் குடித்து வந்தால் நெஞ்சு சளி நீங்கும். வரட்டு இருமல் சரியாக கற்பூரவள்ளி சாரை எடுத்து அதனுடன் தேன் கலந்து காலை மாலை இருவேளை உணவுக்கு முன் உண்ணவேண்டும்.

சைனஸ் பிராப்ளம், தலைவலி, தலை பாரம், நீர் கோர்த்தல் போன்ற பிரச்சினைகளுக்கு இந்த இலையை நல்லெண்ணெயில் வதக்கி தலையில் தேய்த்து 30 நிமிடம் கழித்து குளித்து வந்தால் இந்த தொந்தரவுகள் நீங்கும். இதை வாரம் ஒருமுறை மட்டுமே செய்ய வேண்டும் .
ஜீரண மண்டல கோளாறுகளுக்கு, மலச்சிக்கல் கோளாறுகளுக்கும் இந்த இலைகளை கொண்டு ரசம் தயாரித்து வாரத்தில் இருமுறை சாப்பிட வேண்டும். ஆரோக்கியமாக ஜீரண மண்டலம் பாதுகாக்கப்படும்.

நுரையீரலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி நுரையீரலின் செயல் திறனை அதிகரிக்கும் . ஆஸ்துமா போன்ற நுரையீரல் சம்பந்தமான தொற்றுக்களை குணப்படுத்தும். இதில் உள்ள ஆன்ட்டி இன்ஃப்ளமேடு பிராப்பர்டி உடலில் உள்ள வீக்கத்தையும், முடக்கு வாதத்தையும் குணமாக்கும்.

வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் இந்த இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளித்து வந்தால் வாயில் உள்ள துர்நாற்றம் குறையும். நீரழிவு நோய்களுக்கும் உயர் ரத்த அழுத்த நோய்களுக்கும் இந்த இலைகளை துவையல் அரைத்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும் .

நம் வீட்டுப் பூத்தொட்டியில் எளிதில் வளரக்கூடிய ஒரு சிறிய தாவரம் கற்பூரவல்லி. இதனை முறையாக உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தி நாம் தினமும் எதிர்கொள்ளும் தலை மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வானது கற்பூரவள்ளி இலை ஆகும்.

