Home செய்திகள் புஸ்ஸி ஆனந்தின் விசுவாசிக்கு ஜாக்பாட்! சிஎம்டிஏ அதிகாரம் பெற்ற ராஜ்குமார்!

புஸ்ஸி ஆனந்தின் விசுவாசிக்கு ஜாக்பாட்! சிஎம்டிஏ அதிகாரம் பெற்ற ராஜ்குமார்!

தமிழக அமைச்சரவை விரிவாக்கத்தில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தை (CMDA) உள்ளடக்கிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராகக் கடலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி. ராஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்;

சென்னையின் மிக முக்கிய உள்கட்டமைப்பு மற்றும் நகரத் திட்டமிடலைத் தீர்மானிக்கும் சிஎம்டிஏ (CMDA) அமைப்பின் தலைவராகச் சென்னையைச் சேர்ந்த ஏதேனும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் நியமிக்கப்பட்டிருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் நிலவிய சூழலில், இவருக்கு இத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

கடலூர் வடக்கு மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகிக்கும் பி. ராஜ்குமார், த.வெ.க-வின் பொதுச்செயலாளர் என். ஆனந்தின் (புஸ்ஸி ஆனந்த்) தீவிர விசுவாசியாகச் செயல்பட்டதன் காரணமாகவே இந்த முக்கிய மாவட்டப் பொறுப்பையும், அதன் தொடர்ச்சியாகக் கடலூர் தொகுதியில் களம் காணும் நல்வாய்ப்பைப் பெற்று தற்போது எம்.எல்.ஏ-வாகவும் உயர்ந்துள்ளார்.

ஆரம்பகாலத்தில் விஜய் மக்கள் மன்றம் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரின் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்தபோது, கடலூர் மாவட்டத் தேர்தல்களில் அவரது அறிவுறுத்தலின்படி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் உள்ளிட்ட மாற்றுக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாகவே விஜய் ரசிகர்கள் தீவிர தேர்தல் வேலைகளைச் செய்து வந்தனர்; ஆனால், விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியை முறைப்படி அறிவித்தவுடன், மாற்றுக் கட்சியினருக்கு வேலை செய்வதை முற்றிலுமாக நிறுத்திக் கொண்ட ரசிகர்கள், கட்சியின் தீவிரத் தொண்டர்களாகத் தங்களை மாற்றிக் கொண்டனர்.

இத்தகைய அரசியல் மாற்றச் சூழலில், சிதறிவிடாமல் இருந்த அந்த ரசிகர் பட்டாளத்தை அப்படியே த.வெ.க-வின் கட்டுக்கோப்பான தொண்டர்களாகத் தக்க வைத்துக் கொண்டு, கடலூர் மாவட்டத்தில் கட்சியைப் பலப்படுத்தும் அடிமட்ட வேலைகளில் ராஜ்குமார் அதிரடியாக இறங்கியதே, பலம் வாய்ந்த பழைய அரசியல் கட்சிகளை வீழ்த்தி அவருக்கு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியையும், தற்போது மிக முக்கிய இலாகாவுடன் கூடிய அமைச்சர் பதவியையும் தேடித்தந்துள்ளது.

Exit mobile version