Wednesday, May 27, 2026
Homeசெய்திகள்தமிழக அரசியலில் மீண்டும் கட்சித் தாவல் பரபரப்பு? பழைய வரலாறு மீண்டும் ரிப்பீட் ஆகிறதா!

தமிழக அரசியலில் மீண்டும் கட்சித் தாவல் பரபரப்பு? பழைய வரலாறு மீண்டும் ரிப்பீட் ஆகிறதா!

தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துவிட்டு, ஆளுங்கட்சியாக இருக்கும் மற்றொரு அரசியல் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்ட சம்பவங்கள் இதற்கு முன்பும் பலமுறை அரங்கேறியுள்ளன.

அதற்கான முக்கிய வரலாற்று உதாரணங்களை உற்றுநோக்கினால், கடந்த 2006-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் ம.தி.மு.க சார்பாக கம்பம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற என். ராமகிருஷ்ணன், அப்போதைய திமுக அரசுக்குச் சட்டசபையில் தனிப் பெரும்பான்மை சற்று குறைவாக இருந்த சூழலில், கட்சித் தலைமை தன் மீது சந்தேகம் கொள்வதாகக் கூறி மார்ச் 2009-ல் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு உடனடியாக ஆளுங்கட்சியான தி.மு.க-வில் இணைந்தார்; பின்னர் 2009 ஆகஸ்ட் இடைத்தேர்தலில் அதே கம்பம் தொகுதியில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு மீண்டும் வெற்றியும் பெற்றார்.

இதேபோல, 2006 தேர்தலில் ம.தி.மு.க சார்பில் தொண்டாமுத்தூர் தொகுதியில் வென்ற முன்னாள் மத்திய அமைச்சர் மு. கண்ணப்பன், 2009 நாடாளுமன்றத் தேர்தலின் போது திமுக தலைவர் கலைஞருக்கு ஆதரவாகச் செயல்பட்டதால் கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட விரிசல் மற்றும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்படுவதைத் தவிர்க்கத் தனது எம்.எல்.ஏ பதவியை 2009-ல் ராஜினாமா செய்துவிட்டுத் தாய் கட்சியான தி.மு.க-வில் இணைந்தார்; இதையடுத்து ஆகஸ்டில் நடந்த இடைத்தேர்தலில் இத்தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு எம்.என். கந்தசாமி வெற்றி பெற்றார்.

தூத்துக்குடி மாவட்டத்தின் அதிமுக முக்கிய முகமாக விளங்கி, 2006 தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் வென்ற முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அதிமுக தலைமைக்கும் அவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சித் தாவல் சட்டச் சிக்கல்களைத் தவிர்க்க ஆகஸ்ட் 2009-ல் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு உடனடியாக தி.மு.க-வில் இணைந்ததோடு, டிசம்பர் 2009 இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார்.

மேலும் ஒரு முக்கிய நிகழ்வாக, 2011 தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்ற தேமுதிக எம்.எல்.ஏ-க்களான கே. பாண்டியராஜன் (விருதுநகர்), சி. அருண் பாண்டியன் (பேராவூரணி), மைக்கேல் ராயப்பன் (ராதாபுரம்), ஆர். சுந்தர்ராஜன் (மதுரை மத்திய தொகுதி), டி. சுரேஷ்குமார் (செங்கம்), கே. தமிழ் அழகன் (திட்டக்குடி), ஆர். சாந்தி (சேந்தமங்கலம்), எம். அருண் சுப்பிரமணியன் (திருத்தணி) ஆகிய 8 பேரும், அதிமுகவுக்கும் விஜயகாந்த்துக்கும் ஏற்பட்ட மோதலை அடுத்து, தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு 2016 பிப்ரவரி 25 அன்று அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இணைந்தனர்; இவர்களுடன் பாமக-வைச் சேர்ந்த கலையரசன் மற்றும் புதிய தமிழகம் கட்சியின் ராமசாமி ஆகிய இரு எம்.எல்.ஏ-க்களும் அதே நாளில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

அன்று தங்களது சுயநல அரசியல் ஆதாயங்களுக்காகவும், பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ளவும் என்ன வகையான திரைமறைவு பேரங்கள் நடந்தேறினவோ, அதே போன்றதொரு அதிகாரப் பேர அரசியல் ஆட்டமும், கட்சித் தாவல் நகர்வுகளும்தான் தற்போதைய அரசியல் சூழலிலும் தமிழ்நாட்டில் அரங்கேறி வருவதாகப் பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments