ரயிலில் ஏசி வகுப்புகளில் பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வைகள் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை துவைக்கப்படுகிறது என ஆர்டிஐ மூலம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது, இதற்கு ரயில்வே அமைச்சகத்தின், ஹவுஸ் கீப்பிங் மேலாண்மை பிரிவு அதிகாரி ரிஷு குப்தா தெரிவிக்கையில், ‘‘கீழே விரிக்க கொடுக்கப்படும் போர்வைகள் ஒவ்வொரு முறையும் துவைக்க அனுப்பி வைக்கப்படுகிறது, கம்பளிகள் மாதத்திற்கு ஒருமுறை துவைக்க அனுப்பப்படுகிறது’’ என தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து ரயில்வே துறை சார்ந்த ஊழியர்கள் தெரிவிக்கையில் பல அதிர்ச்சியான விஷயங்கள் வெளியாகியுள்ளது.
அதாவது, பெரும்பாலும் போர்வைகளில் அழுக்கு, கறை, துர்நாற்றம், ஈரப்பதம் இல்லையெனில் அவை மடித்து மீண்டும் பயன்பாட்டுக்காக ரயில் பெட்டியிலேயே வைக்கப்படும். அழுக்கு இருந்தால் மட்டும் அவை துவைப்பதற்கு போடப்படும். கம்பளிகள் கனமானவை. அவற்றை துவைப்பது கடினமானது. எனவே, அவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ரயில்வேயில் பயன்படுத்தப்படும் போர்வை, கம்பளி, தலையணை உறை ஆகியவற்றை துவைக்க 46 சலவை மையங்கள் இருக்கின்றன. இந்த மையம் அமைந்துள்ள இடம், சலவை இயந்திரம் ஆகியவை ரயில்வே துறைக்கு சொந்தமானவையாகும். ஆட்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணி செய்து வருகின்றனர் என தெரிவித்தனர். வசதியான பயணம், கட்டணம் குறைவு உள்ளிட்ட பல காரணங்கள் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர்.
