செப்டம்பர் 6, 2019 ஆம் ஆண்டு ஒட்டு மொத்த அறிவியல் உலகமும், சந்திரயான் 2ன் தரை இறங்குதல் நிகழ்வை பார்த்துக் கொண்டிருந்த நேரம். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் 2.5 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்த போது, இன்ஜின் கோளாரால் நிலவின் மேற்பரப்பில் மோதியது.
சந்திரயான் 2 திட்டத்தின் தரையிரங்கும் திட்டம் தோல்வி அடைந்த நிலையில், ஆர்பிட்டர் தொடர்ச்சியாக சுற்றி வந்தது.
இதனால் ‘சந்திரயான்-2 திட்டம் முழுமையாக தோல்வி அடையவில்லை. பகுதியாக மட்டுமே தோல்வி அடைந்துள்ளது. தற்போது இதிலிருந்து நம்மால் பாடம் கற்றுக் கொள்ள முடியும்.
விரைவில் சந்திரயான்-2 ஆர்பிட்டர் பயன்படுத்தப்படும்’ என்றார் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்.
இஸ்ரோ சிவன் கூறி ஐந்து வருடங்கள் ஆகும் நிலையில், இன்னமும் ஆர்பிட்டர் இயங்குகிறது. அந்த ஆர்பிட்டரும் சந்திரயான் 3 திட்டத்தின் தொலைத் தொடர்புக்காக இணைக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் ஒரு வருடம் மட்டுமே ஆர்பிட்டர் செயல்படும் என கணக்கிடப்பட்ட நிலையில், எரிபொருள் மிச்சத்தால் ஏழரை வருட காலம் சந்திரயான் 2 ஆர்பிட்டரால் நிலவை சுற்றிவர முடியும் என தெரியவந்தது.
நிலவை சுற்றி போலார் சுற்றுவட்ட பாதையில், ஆர்பிட்டர் சென்று கொண்டிருக்கிறது. அது தரும் தரவுகளை வைத்து பல ஆராய்ச்சிகளை இவ்வளவு நாட்கள் இஸ்ரோவால் செய்ய முடிந்தது.
இத்திட்டத்தினால், உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளுக்கு நிலவின் தரவுகள் கிடைக்கப் பெற்றதோடு புகைப்படங்கள் எடுக்கக்கூடிய உள்கட்டமைப்பும் இதில் இருக்கிறது என்பதால், நிலவின் வெவ்வேறு கோணங்களினாலான புகைப்படங்கள் விஞ்ஞானிகளுக்கு கிடைத்தது.
