வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது.
மேலும், கேரளாவில் மீண்டும் வருகிற 2-ந் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மலையோர மாவட்டங்களில் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அம்மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது.
இதற்கிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், திருச்சூர், இடுக்கி, எர்ணாகுளம் ஆகிய 5 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.
இதையடுத்து இந்த 5 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதுபோல நாளை பத்தினம்திட்டா, கோட்டயம், இடுக்கி மாவட்டங்களிலும், நாளை மறுநாள் வயநாடு, கோழிக்கோடு, பாலக்காடு, இடுக்கி மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
