Home Uncategorized கள்ளக்குறிச்சியில் 144 தடை உத்தரவு; காவல்துறையின் முழு கட்டுப்பாட்டில் பள்ளி வளாகம்

கள்ளக்குறிச்சியில் 144 தடை உத்தரவு; காவல்துறையின் முழு கட்டுப்பாட்டில் பள்ளி வளாகம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி மரணம் தொடர்பான விவகாரம் தமிழ்நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகிகள் தெரிவித்துள்ள நிலையில், இது கொலை என்று மாணவியின் பெற்றோர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

இந்நிலையில் பள்ளி மாணவி மரணம் விவகாரத்தில் விசாரணை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவி மரணம் நடத்த இடத்தில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 4 நாட்களாக அவரது உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று அது கலவரமாக மாறியுள்ளது. பள்ளிக்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்ட வன்முறையாளர்கள், 50க்கும் மேற்பட்ட பள்ளியின் வாகனங்களுக்கு தீவைத்துள்ளனர்.

மேலும் சென்னை – சேலம் நெடுஞ்சாலையில் சாலை மறியல் ஈடுபட்ட கும்பல், போலீசார் தடுப்புகளை உடைத்து வன்முறையில் ஈடுபட்டனர். காவல்துறை மீது கல்வீச்சு தாக்குதலை நடத்தினர். போலீஸ் வாகனங்களை தீ வைத்து எரித்தனர். இதனால் நிலைமைக் கட்டுபடுத்த காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

போலீசாரின் தடுப்புகளை உடைத்து சென்று, சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றன.  பள்ளி வளாகத்தில் நின்றுக்கொண்டிருந்த 20க்கும் மேற்பட்ட வாகனங்களை அடித்து நொறுக்கி, தீ வைத்து எரித்துள்ளனர்.

ஆயிரக்கணக்கானோர் கூடியதால, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர வெளி மாவட்டத்திலிருந்து போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும் வன்முறையில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி எச்சரிககை விடுத்துள்ளார்.

மேலும் கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது. அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம், கள்ளக்குறிச்சி தாலுக்காக்களில் 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது.

மாணவி இறப்பு தொடர்பான போராட்டம் வன்முறையாக மாறியதால் கள்ளக்குறிச்சி தாலுகா பகுதியில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. கலவரம் நிகழ்ந்த பள்ளி வளாகம் காவல்துறையின் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. 

இதனிடையே டிஜிபி சைலேந்திர பாபு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

மேலும் கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் அமைதி நடவடிக்கை தொடர்வதாகவும் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை சேலம் நெடுஞ்சாலையில் அண்டை மாவட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சின்னசேலத்தில் போராட்டக்காரர்களை தடியடி நடத்தி அதிரடிப்படை கலைத்து வருகிறது.

Exit mobile version