Home Uncategorized கத்ரா – ஸ்ரீநகர் இடையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை துவங்கி வைத்தார் பிரதமர் மோடி!

கத்ரா – ஸ்ரீநகர் இடையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை துவங்கி வைத்தார் பிரதமர் மோடி!

  கத்ரா – ஸ்ரீநகர் இடையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளார். இதன்மூலம் காஷ்மீரை நாட்டின் மற்ற பகுதிகளுடன் ரயில் சேவை மூலம் இணைக்கும் கனவு நனவாகியுள்ளது. இதற்கான விதை கடந்த சில ஆண்டுகளில் போடப்பட்டது அல்ல. கிட்டதட்ட 19ஆம் நூற்றாண்டு என்று சொன்னால் பலரும் ஆச்சரியப்படுவீர்கள். 

ஆம்.. இந்தியாவில் 1853ஆம் ஆண்டு முதல் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த சூழலில் காஷ்மீரை ஆண்டு வந்த டோக்ரா வம்சத்தினர் மலைப் பகுதியில் ரயில் சேவையை கொண்டு வர வேண்டும் என்று விரும்பினர்.அப்போது ஆட்சி செய்து கொண்டிருந்த மகாராஜா பிரதாப் சிங்  1892ஆம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் ரயிலை இயக்க வேண்டும் என்ற யோசனையை பகிர்ந்துள்ளார். இதற்காக பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை செய்யப்பட்டது. 

இந்நிலையில் 1989ஆம் ஆண்டு ஜூன் மாதம் எஸ்.ஆர்.ஸ்காட் ஸ்ட்ராட்டென் அண்ட் கோ என்ற பிரிட்டிஷ் பொறியியல் நிறுவனத்தை அணுகினார். இந்நிறுவனம் மூலம் சர்வே நடத்தப்பட்டது. ரயில் வழித்தடம் அமைக்க விரிவான திட்ட அறிக்கையும் தயார் செய்யப்பட்டது. இதற்கான பணியில் மூன்று பிரிட்டிஷ் பொறியாளர்கள் 1898 முதல் 1909 வரை ஈடுபட்டனர்.

முதல் பொறியாளர் டி.ஏ.ஆடம் தாக்கல் செய்த அறிக்கையில் நேரோ கேஜ் ரயில் பாதையில் நீராவி எஞ்சின் மூலம் ரயிலை இயக்கலாம் என்று பரிந்துரை செய்தார். ஆனால் மலைப் பாங்கான இடத்தில் உள்ள சவால்களை கருத்தில் கொண்டு, இந்த ஆலோசனை நிராகரிக்கப்பட்டது. 

இரண்டாவது பொறியாலர் டபிள்யூ ஜே வெயிட்மேன் தாக்கல் செய்த அறிக்கையில் அப்போட்டாபாத்தில் இருந்து ஜீலம் நதி வழியாக ஒரு வழித்தடத்தை பரிந்துரை செய்தார். ஆனால் இதுவும் நிராகரிக்கப்பட்டது. மூன்றாவது பொறியாளர் வைல்ட் பிளட் தாக்கல் செய்த அறிக்கைய்ல் செனாப் ஆற்றை ஒட்டி ரியாசி ஏரியாவிற்கு வழித்தடம் அமைக்கலாம் என்று பரிந்துரை செய்தார். இதற்கு ஒப்புதல் கிடைத்தது.

இதையொட்டி உதம்பூர், ராம்சு, பனிஹால் ஆகிய பகுதிகளில் எரிபொருள் நிலையம் அமைக்கப்பட்டன. ஆனால் சில காரணங்களால் இந்த திட்டமும் நிராகரிக்கப்பட்டது. நிலக்கரி மூலம் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய புவியியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு பலகட்ட ஆய்வுகள் செய்த பின்னரும், திட்டம் அடுத்தகட்டத்தை நோக்கி நகரவில்லை. ஏனெனில் கரடு முரடான மலைப் பகுதி, அதிகப்படியான செலவு, அரசியல் காரணங்கள் உள்ளிட்டவற்றால் மகாராஜா பிரதாப் சிங்கின் ஆட்சி காலத்தில் காஷ்மீருக்கு ரயில் சேவையை அளிக்க முடியவில்லை.

1983ல் இந்திரா காந்தி ஆட்சியில் ஜம்மு – உதம்பூர் – ஸ்ரீநகர் ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் 13 ஆண்டுகளில் வெறும் 11 கிலோமீட்டர் மட்டுமே ரயில் பாதை போடப்பட்டது. அதன்பிறகு தேவகவுடா, ஐ.கே.குஜரால் ஆகிய பிரதமர்களின் ஆட்சி காலத்திலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கிடையில் செலவுகள் அதிகரித்து கொண்டே சென்றதால் எந்த ஒரு அரசாலும் உறுதியான முடிவு எடுக்க முடியவில்லை. 

இந்நிலையில் 2002ஆம் ஆண்டு உதம்பூர் – ஸ்ரீநகர் – பாராமுல்லா ரயில் பாதை திட்டம் தேசிய திட்டமாக அறிவிக்கப்பட்டது.2009ல் குவாசிகந்த் – பாராமுல்லா, 2013ல் பனிஹால் – குவாசிகந்த், 2014ல் உதம்பூர் – கத்ரா, 2023ல் பனிஹால் – சங்கல்தான் என ஒவ்வொரு கட்டமாக பணிகள் முடிவடைந்தன. 2024 பிப்ரவரி மாதம் ரயில் பாதை பணிகள் முழுமை பெற்றன. இவ்வாறு காஷ்மீரில் ரயில் சேவைக்கான திட்டம் 130 ஆண்டுகளுக்கு மேல் நடந்து வந்த நிலையில் மோடியால்தான் இது சாத்தியமானது என்போருமுண்டு.

Exit mobile version