Home செய்திகள் சொகுசு வெளிநாட்டு சுற்றுலா வாங்கிய மருத்துவர்கள்: RTI மூலம் அம்பலமான அதிர்ச்சி தகவல்!

சொகுசு வெளிநாட்டு சுற்றுலா வாங்கிய மருத்துவர்கள்: RTI மூலம் அம்பலமான அதிர்ச்சி தகவல்!

மருந்து நிறுவனங்களின் அன்பளிப்புகளையும் சொகுசுச் சுற்றுலாக்களையும் பெற்றுக்கொண்டு, நோயாளிகளுக்குத் தார்மீகத் துரோகம் இழைக்கும் சில மருத்துவர்களின் பேராசைப் முகம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம் மீண்டும் அம்பலமாகியுள்ளது.

‘அப்வி’ (AbbVie) என்ற முன்னணி பார்மா நிறுவனம், கடந்த 2024 ஆம் ஆண்டில் இந்தியாவைச் சேர்ந்த 30 மருத்துவர்களுக்குச் சுமார் 2 கோடி ரூபாய் செலவில் பாரிஸ் மற்றும் மொனாக்கோ நாடுகளுக்குச் சொகுசுச் சுற்றுலா (Foreign Junket) ஏற்பாடு செய்து கொடுத்த விவகாரத்தில் அவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என்று மத்திய அரசின் விசாரணைக் குழுவால் உறுதி செய்யப்பட்டது.

ஆனால், அதிர்ச்சி என்னவென்றால், குற்றவாளிகளான 30 மருத்துவர்களில் 3 பேரின் பெயர்கள் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு (NMC) அனுப்பப்பட்ட பட்டியலில் இருந்து மர்மமான முறையில் ‘மறைந்து’ போயின; இதற்கான எந்தவொரு விளக்கத்தையும் மருந்தியல் துறை இதுவரை அளிக்கவில்லை.

எஞ்சிய 27 மருத்துவர்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த 11 பேர், குஜராத் மற்றும் தெலங்கானாவில் தலா 3 பேர், பஞ்சாப், கர்நாடகா, மேற்கு வங்கம் மற்றும் டெல்லியில் தலா 2 பேர், அஸ்ஸாம் மற்றும் கேரளாவில் தலா ஒருவர் எனப் பட்டியல் நீள்கிறது.

இந்த விவகாரம் நடந்து முடிந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையிலும், சம்பந்தப்பட்ட 9 மாநில மருத்துவக் கவுன்சில்களில் 6 கவுன்சில்கள் குற்றவாளி மருத்துவர்கள் மீது இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல், ‘அறிக்கை’ கூடத் தராமல் இழுத்தடித்து வருவது மருத்துவ உலகின் உச்சக்கட்ட அதிகார துஷ்பிரயோகத்தையும் அலட்சியத்தையும் காட்டுகிறது.

மருந்து நிறுவனங்களை வெறும் ‘கண்டனத்தோடு’ விட்டுவிட்டு, தவறிழைத்த மருத்துவர்களின் பெயர்களைப் பொதுவெளியில் வெளியிடாமல் மறைத்து, அவர்களைக் காப்பாற்றத் துடிக்கும் இந்த மருத்துவ மாஃபியாக்களின் பின்னணியை ஒட்டுமொத்தச் சமூக ஆர்வலர்களும் தற்போது கடுமையாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Exit mobile version