Home Uncategorized மீண்டும் 24ம் புலிகேசி படப்பிடிப்பு துவங்கலாம் – ஒருவழியாக பிரச்னை தீர்ந்தது

மீண்டும் 24ம் புலிகேசி படப்பிடிப்பு துவங்கலாம் – ஒருவழியாக பிரச்னை தீர்ந்தது

ஷங்கர் மற்றும் நடிகர் வடிவேலு இடையிலான பிரச்னை சுமூகமாக பேசி தீர்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் 24ம் புலிகேசி படப்பிடிப்பு துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் ஷங்கர், எஸ்.பிக்சர்ஸ் சார்பில், நடிகர் வடிவேல் நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி இரண்டாம் பாகத்தை இம்சை அரசன் 24ம் புலிகேசி என்ற பெயரில் மீண்டும் நடிகர் வடிவேலை வைத்து தயாரித்தார். இந்த படத்தையும் மீண்டும் சிம்புதேவன் இயக்க, படப்பிடிப்பு தொடங்க இருந்தது.

ஆனால் இடையில் இயக்குனருக்கும், வடிவேலுவுக்கும் ஏற்பட்ட பிரச்னையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனால் பல கோடிகளை இழந்ததாக கூறிய ஷங்கர், தயாரிப்பாளர் சங்கத்தில் வடிவேலு மீது புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்நிலையில், தற்போது இப்பிரச்னையை பேசி சுமூகமாக முடித்துள்ளனர். இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தின் அறிக்கை: தமிழ் திரைப்படதயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள ஷங்கர், 23ம் புலிகேசி -2 படத்தில் நடித்த வடிவேலு மீது புகார் அளித்திருந்தார். மேற்படி புகார் சம்பந்தமாக வடிவேலு மற்றும் ஷங்கரிடம் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி, சுமூகமாக தீர்வு கண்டுள்ளனர். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து மீண்டும் இதன் படப்பிடிப்பு துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Exit mobile version