Home Uncategorized மின் வினியோகம் நிறுத்தம் – மின்வாரியம் விளக்கம்

மின் வினியோகம் நிறுத்தம் – மின்வாரியம் விளக்கம்

தமிழக மின்வாரியம், டிரான்ஸ்பார்மர், மின் வினியோகப் பெட்டி உள்ளிட்ட மின் சாதனங்கள் உதவியுடன், மின் வினியோகம் செய்கிறது. அந்த சாதனங்களில், 24 மணி நேரமும் மின்சாரம் செல்வதால், அதிக வெப்பத்துடன் காணப்படுகின்றன.

இதனால், துணைமின் நிலையம், மின் சாதனங்களில் பழுது ஏற்படாமல் இருக்க, குறிப்பிட்ட இடைவெளியில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும். அந்த பணி நடக்கும் இடங்களில், காலை 9:00 முதல் மதியம், 2:00 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

இதுதொடர்பான விபரம், பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும். பள்ளி, கல்லுாரி பொதுத்தேர்வு, கோடை வெயில், லோக்சபா தேர்தல் உள்ளிட்ட காரணங்களால், கடந்த பிப்ரவரியில் இருந்து பராமரிப்பு மின்தடை நிறுத்தப்பட்டது.

ஆனாலும், சுட்டெரித்த வெயிலால் மின் சாதனங்களில், ‘ஓவர்லோடு’ காரணமாக அடிக்கடி பழுது ஏற்பட்டதால், பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது.

தற்போது, தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து, மீண்டும் மின் சாதனங்களில் பராமரிப்பு பணிகளை, மின்வாரியம் துவக்கியுள்ளது. அந்த பணி நடக்கும் இடங்களில், பகலில் மின்தடை செய்யப்பட உள்ளது.

Exit mobile version