Home செய்திகள் தூய்மை பணியாளர் பத்மாவுக்கு கடல் கடந்து தேடிவந்த கெளரவம்!

தூய்மை பணியாளர் பத்மாவுக்கு கடல் கடந்து தேடிவந்த கெளரவம்!

தூய்மை பணியாளர் பத்மாவுக்கு தங்க மோதிரம் பரிசளித்து கௌரவித்த மலேசிய சட்டத்துறை துணை அமைச்சர்

சென்னை திருவல்லிக்கேணி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பத்மா. தூய்மை பணியாளரான இவர் கடந்த ஜனவரி 11ம் தேதி தி.நகரில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கே கேட்பாரற்று சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகை அடங்கிய பையை கண்டதும் அவற்றை அருகில் இருந்த பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். நகைக்கு உரியவரிடம் அந்த நகையும் பத்திரமாக சேர்க்கப்பட்டது.

இந்த நிகழ்வை தொடர்ந்து தூய்மை பணியாளர் பத்மாவுக்கு தமிழ்நாட்டையும் தாண்டி பல இடங்களில் இருந்து பாராட்டுக்கள் குவிந்தன. தமிழக முதல்வர் திரு. ஸ்டாலின் பத்மாவின் நேர்மையை பாராட்டி அவருக்கு ஒரு லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பத்மாவை தனது இல்லத்திற்கே அழைத்து அவரை பாராட்டியதுடன் தங்க சங்கிலி அணிவித்து அவரை கௌரவித்தார்.

இந்த நிலையில் தற்போது கடல் தாண்டி பணியாளர் பத்மாவின் நேர்மைக்கான கௌரவம் தேடி வந்துள்ளது ஆம்.. மலேசிய சட்டத்துறை அமைச்சரான திரு மூ குலசேகரன் தூய்மை பணியாளர் பத்மாவின் இந்த நேர்மையான செயல் குறித்து கேள்விப்பட்டு தனது உதவி அதிகாரியான வடிவுக்கரசி என்பவரை சென்னைக்கு அனுப்பி வைத்து பத்மாவுக்கு தங்க மோதிரம் அணிவித்து கௌரவம் செய்துள்ளார்.

அதிகாரி வடிவுக்கரசி பணியாளர் பத்மா பணி செய்யும் இடத்திற்கே நேரில் சென்று அவருக்கு மோதிரம் அணிவித்தார். இந்த நிகழ்வின் போது தூய்மை பணியாளர் பத்மாவுடன் மலேசிய சட்டத்துறை துணை அமைச்சர் திரு மு .குலசேகரன் வீடியோ காலில் பேசி, அவருக்கு தனது மனப்பூர்வமான பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

Exit mobile version