மும்பையில் நேற்று – செவ்வாய்க்கிழமை மாலை பாரதிய ஜனதா கட்சி சார்பில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக ஒரு பிரம்மாண்டப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் பேரணியால் நகரின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் பல மணி நேரம் ஸ்தம்பித்தன.

அப்போது அங்கு சிக்கிக்கொண்ட பெண் ஒருவர், மகாராஷ்டிர மாநில அமைச்சர் கிரீஷ் மகாஜனை நேரில் பார்த்ததும் ஆவேசமடைந்தார். அமைச்சரை வழிமறித்த அந்தப் பெண், “உங்களுக்குப் போராட்டம் நடத்த வேண்டும் என்றால் மைதானத்திற்குச் செல்லுங்கள்; இப்படி நடுத்தெருவில் பேரணி நடத்தி பொதுமக்களுக்கு ஏன் இடையூறு செய்கிறீர்கள்?” என்று துணிச்சலாகக் கேள்வி எழுப்பினார்.
இந்தப் புகாரை சற்றும் எதிர்பார்க்காத அமைச்சர் அமைதி காக்க, அந்தப் பெண் கோபமாக அங்கிருந்து நகர்ந்தார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், அந்தப் பெண்ணின் துணிச்சலை எதிர்க்கட்சிகள் பாராட்டி வருகின்றன.
அதே சமயம், ஆளுங்கட்சியின் இத்தகைய போராட்ட முறையால் சாமானிய மக்கள் பாதிக்கப்படுவதாகக் கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளன.