நான் ஸ்கூல் படிச்ச காலத்துல இருந்தே நாகேஷ் சார் எனக்கு நல்ல பழக்கம். என்னோட ஃபிரெண்டு நாராயணனோட அப்பா ஒரு சினிமா தயாரிப்பாளர். `கை நிறைய காசு’னு ஒரு படம் நாகேஷ் சாரை வெச்சு தயாரிச்சிட்டிருந்தார். அந்தப் படத்துல நாகேஷ் சாருக்கு டபுள் ரோல். சரண்யா பொன்வண்ணனோட அப்பா ராஜன் சார்தான் அந்தப் படத்தோட இயக்குநர். ஷூட்டிங் போயிட்டிருந்தப்போ நாராயணன்கூட சேர்ந்து ஸ்பாட்டுக்குப் போனேன். அப்போதான் நாகேஷ் சாரை முதன் முதல்ல நேர்ல பார்த்தேன். அப்போ இருந்து அவர் எனக்கு நல்ல பழக்கமாகிட்டார்.”
அதுக்கப்புறம் அடிக்கடி நாகேஷ் சார் வீட்டுக்குப் போவேன். அவரோட பையனுக்கும் எனக்கும் சின்ன வயசு வித்தியாசம்தான். அதனால என்னையும் அவரோட ஒரு பையனா பார்த்தார். என்னோட ரொம்ப நட்பா இருப்பார். அவருக்கு வெளி ஊர்கள்ல ஷூட்டிங் இருக்கிறப்போ என்னையும் சேர்த்து கூட்டிட்டுப் போவார். ஏன்னா, ஷூட்டிங் முடிஞ்சதுக்கு அப்புறம் அவருக்குப் பேச்சுத் துணைக்கு ஒரு ஆள் வேணும். அந்த சமயத்துல அவரோட நெருங்கிப் பழகுறதுக்கான வாய்ப்பு கிடைச்சது. நிறைய ஜோக் அடிப்பார்; கதைகள் சொல்வார்.”
