தமிழக சட்டப்பேரவை மூன்று நாள் விடுமுறைக்கு பிறகு, இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் நீட் தேர்வுக்கு எதிரான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதாவில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் வருமாறு:-
நீட் தேர்வு ஒரு நடுநிலையான தேர்வு முறை இல்லை என்பது ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் குழுவினர் அறிக்கையிலிருந்து தெளிவாகிறது.
கடந்த 4 ஆண்டுகளில் நீட் தேர்வு சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பை சேர்ந்த மாணவர்களின் நம்பிக்கையையும் கனவுகளையும் தகர்த்துள்ளது.
கட்டாயமாக எதிர்கொள்ளும் கூடுதல் தேர்வானது சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பு மாணவர்களுக்கு பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தி உள்ளது. நீட் தேர்வு சமத்துவமின்மையை வளர்க்கிறது. சிறப்பு பயிற்சி பெறக்கூடிய சமூகத்தின் பொருளாதார மற்றும் அதிக சலுகை பெற்ற வகுப்பினரை ஆதரிக்கிறது.
சமூக நீதியை உறுதி செய்யவும் சமத்துவம் மற்றும் சமவாய்ப்பை நிலைநிறுத்தவும் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய அனைத்து மாணவர்களையும் பாகுபாடு காட்டுவதில் இருந்து பாதுகாக்கவும் சட்டம் ஒன்றை இயற்ற அரசு முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

