Home செய்திகள் பயணிகளுக்கு நிம்மதி… சென்னை விமான நிலையத்தில் புதிய டாக்ஸி வசதி!

பயணிகளுக்கு நிம்மதி… சென்னை விமான நிலையத்தில் புதிய டாக்ஸி வசதி!

வெகுநாட்களாக நிலவி வந்த இழுபறிக்குப் பிறகு, சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையத்திற்கு (T1) எதிரே அமைக்கப்பட்டுள்ள புதிய கார் பிக்கப் பாயிண்ட் (Cab Pick-up Point) வரும் ஜூன் மாதம் இறுதியில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்பே இதன் கட்டுமானப் பணிகள் முடிவடைந்தும், சட்டச் சிக்கல்கள் மற்றும் தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் இதனைத் திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது இதற்கான தடைகள் நீங்கியுள்ளதால், விமான நிலைய ஆணையம் (AAI) இதனைத் திறக்க முடிவு செய்துள்ளது.

தற்போதுள்ள நடைமுறையில், பயணிகள் தங்களின் உடைமைகளுடன் நீண்ட தூரம் நடந்து அல்லது பேட்டரி கார்கள் மூலம் மல்டி லெவல் கார் பார்க்கிங் (MLCP) பகுதிக்குச் சென்று, அங்கிருந்து லிப்ட் மூலம் குறிப்பிட்ட தளத்திற்குச் சென்றுதான் டாக்ஸி ஏற வேண்டிய சூழல் உள்ளது.

இது முதியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் வருவோருக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வந்தது. ஜூன் இறுதியில் இந்த புதிய பிக்கப் பாயிண்ட் திறக்கப்படுவதன் மூலம், பயணிகள் முனையத்திலிருந்து வெளியே வந்தவுடன் மிக அருகிலேயே டாக்ஸிகளைப் பிடித்துச் செல்ல முடியும். இது பயணிகளின் நேரத்தையும் அலைச்சலையும் மிச்சப்படுத்தும் ஒரு நிம்மதியான செய்தியாக அமைந்துள்ளது.

Exit mobile version