தமிழகப் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஏ.ராஜ்மோகன், சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தி, புதிய மாநிலக் கல்விக் கொள்கையின்படி வடிவமைக்கப்பட்டுள்ள தொடக்கப் பள்ளிகளுக்கான (Primary Classes 1 – 3) புதிய பாடப்புத்தகங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
இக்கூட்டத்தில், ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளன்றே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்குப் புதிய பாடப்புத்தகங்கள், சீருடைகள் மற்றும் கல்வி உபகரணங்கள் அனைத்தும் எவ்விதத் தடையுமின்றி நேரடியாகக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அமைச்சர் திட்டவட்டமாக அறிவுறுத்தினார்.

இந்த ஆண்டு 1 முதல் 3-ஆம் வகுப்புகளுக்கு மாநிலக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் முற்றிலும் புதிய பாடத்திட்டம் அச்சிடப்பட்டு, 48 சதவீதப் புத்தகங்கள் ஏற்கனவே மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள புத்தகங்களையும் மே இறுதிக்குள் அனைத்துப் பள்ளிகளுக்கும் விரைவாகக் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும், ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் தங்களின் படிப்பைத் தொடர்வதை முதன்மைக் கல்வி அதிகாரிகள் (CEOs) கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.